தமிழக பால்வளத்துறை புதியதாக ‘ஆவின் டிலைட்’ என்ற பசும்பாலை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆவின் நிறுவனம் வாயிலாக தமிழகம் முழுவதும் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பாலானது மூன்று தரங்களாக பிரிக்கப்பட்டு ஆரஞ்ச் பச்சை நீலம் நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்பட்டு வருகிறது. ஏறத்தாழ தினசரி 30 லட்சம் லிட்டர் பால் விற்பனையை ஆவின் நிறுவனம் நிகழ்த்தி வருகிறது.
மேலும் விற்பனையை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை ஆவின் வகுத்து வருகிறது. அதில் ஒன்றாகவே சமீபத்தில் சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனை துவங்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ‘ஆவின் டிலைட்’ என்ற புதிய திட்டத்தை ஆவின் தொடங்கியுள்ளது.
பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், ‘ஆவின் டிலைட்’ என்ற பசும்பாலை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த பாலில் 3.5% கொழுப்பும், 8.5% சதவீதம் இதர சத்துகளும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பாலினை சுமார் 90 நாட்கள் வரை எவ்வித குளிர்சாதன வசதியுமின்றி வைத்து பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எந்த கெமிக்கலும் இதில் கலக்கப்படவில்லை என்று தகவல் வெளிவந்துள்ளது.
இது குறித்து ஆவின் நிறுவனம் தெரிவிக்கையில், மழைக்காலங்கள் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றி பால் கிடைத்திட ஆவின் டிலைட் மிகப்பெரிய பங்காற்றும் என்று தெரிவித்துள்ளது.
புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ‘ஆவின் டிலைட்டில்’ 500 மில்லி லிட்டர் அளவு கொண்ட பால் பாக்கெட் ரூ.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க: சிங்கக் குட்டிக்கு ஃபிடிங் பாட்டில் மூலம் பால் வழங்கும் மனிதர்; வைரலான வீடியோ!