சென்னையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பயணிக்கும் மக்களுக்காக ‘ஸ்லீப்பிங் பாட்’ என்ற வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘ஸ்லீப்பிங் பாட்’ என்று சொல்லப்படும் இது ஒரு அறை போல் இருக்கும். இதில் படுக்கை, சார்ஜிங் வசதிகள், லக்கேஜ் வைக்கும் இடம், விளக்கு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு ஸ்லீப்பிங் பாட்டிலும் ஒரு நபர் மற்றும் குழந்தை தங்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும், பயணிகள் தங்களின் இணைப்பு விமானத்திற்காகக் காத்திருக்கும்போது, இவ்வசதி மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பானில் இவ்வசதி முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. அவர்களின் கருத்தைப் பெற்று, இந்திய விமான நிலைய ஆணையம் சென்னை சர்வதேச விமான நிலையத்தின் உள்நாட்டில் பயணிகளுக்காக இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளனர்.
அதிநவீன வசதிகளைக் கொண்ட ‘ஸ்லீப்பிங் பாட்’, உள்நாட்டு முனையத்தின் வருகைப் பிரிவில், பேக்கேஜ் பெல்ட் எண் ஒன்றிற்கு அருகில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த ‘ஸ்லீப்பிங் பாட்’ வசதியை மக்கள் ஒரு மணிநேர அடிப்படையில் பெறலாம் அல்லது ஆன்லைன் முன்பதிவு மூலமும் பதிவு செய்யலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், விமானத்தில் பயணம் செய்பவர்கள் காத்திருப்பதில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள், அவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது தான் இந்த வசதி. ஓய்வெடுக்க பயணிகள் இனிமேல் ஹோட்டல்களைத் தேடுவதை தவிர்த்து விமான நிலையத்திலேயே ஓய்வெடுத்தால் நேரம் வீணாவதைத் தவிர்க்கலாம் என்று தெரிவிக்கின்றனர்.