தமிழ்நாட்டில் எந்தெந்தக் கோவில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றுகின்றன, எந்தெந்த கோவில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றவில்லை என்பது குறித்துக் கண்டறிய ஐந்து பேர் கொண்ட குழுவை அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2020-ம் ஆண்டில் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனத்திற்கென புதிய விதிகள் கொண்டு வரப்பட்டன. அந்த புதிய விதிகளின்படி, அர்ச்சகராக சேருவோர் 18 வயதிலிருந்து 35 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும் என்றும் ஆகம பள்ளிகளில் பயிற்சி பெறுவோராக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் கோவில்களில் அனைத்து சாதியைச் சேர்ந்த 28 பேரை பல்வேறு கோவில்களில் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி அர்ச்சகர்களாக தமிழ்நாடு அரசு நியமனம் செய்தது. இவர்களில் 4 பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்.
அனைத்து சாதி அர்ச்சகர்கள் நியமனத்தை எதிர்த்தும், இந்த புதிய விதிகளை எதிர்த்தும் அகில இந்திய ஆதி சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்பட பத்துக்கும் மேற்பட்ட அமைப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த ஓராண்டு காலமாக நடந்துவந்த நிலையில், வழக்கை விசாரித்து வந்த தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மற்றும் மாலா அடங்கிய அமர்வு கடந்த திங்கள் கிழமை (ஆகஸ்ட்-22) தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்பில், அர்ச்சகர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விதித்த விதிகள் செல்லும் என்றும், ஆகம விதிப்படி இயங்கும் கோவில்களில் அந்த ஆகம விதிப்படி அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், தமிழ்நாட்டில் எந்தெந்தக் கோவில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றுகின்றன, எந்தெந்த கோவில்கள் ஆகம விதிகளைப் பின்பற்றவில்லை என்பது குறித்துக் கண்டறிய ஐந்து பேர் குழுவை அமைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆறு மாதங்களுக்கு வாடகை இல்லை, முழு நேர பாதுகாப்பு – நீதிபதிகளுக்கான சட்டப்பிரிவில் திருத்தம்