சென்னை: தமிழகத்தின் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி,
தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,
அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
சென்னையைப் பொறுத்தவரை:
அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
இதையும் படிங்க:இன்று முதல் தொடங்குகிறது ஐஎஸ்எல் கால்பந்து போட்டி..உற்சாகத்தில் ரசிகர்கள்!
கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏஆர்ஜி பகுதியில் 7 சென்டி மீட்டர் அளவு மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
07.10.2022- 11.10.2022: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஓட்டிய தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளை செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.