இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் 9-ஆவது சீசன் கொச்சியில் இன்று தொடங்குகிறது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி 2013-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கால்பந்து ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதாகவே ஐஎஸ்எல் இருந்து வருகிறது.
இந்நிலையில், இந்த வருடத்திற்கான ஐஎஸ்எல் இன்று தொடங்க உள்ளது. கொரோனா சூழல் காரணமாக கடந்த 2 சீசன்களும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நடத்தப்பட்ட நிலையில், இந்த சீசன் வழக்கமான ‘ஹோம்-அவே’ முறையில் நடைபெறுகிறது.
இதையும் படிங்க:உலகளவில் இத்தனை கோடி வசூலா….அசரவைக்கும் பொன்னியின் செல்வன்!
எனவே, அனைத்து அணிகளும் தனது சொந்த மண்ணில் ஒரு ஆட்டமும், எதிரணி மண்ணில் ஒரு ஆட்டமும் விளையாட உள்ளன. மேலும், மைதானத்துக்கு நேரில் வந்து ஆட்டத்தைக் காண ரசிகர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த 9-வது சீசனில், லீக் ஆட்டத்தின் முடிவில் முதலிரு இடங்களில் இருக்கும் அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறும். எஞ்சிய இரு இடங்களுக்காக, 3 முதல் 6-ஆவது இடத்துக்குள்ளாக இருக்கும் அணிகள் சிங்கிள் லெக் பிளேஆஃப் ஆட்டத்தில் மோதி, தகுதிபெறும்.
இன்று தொடங்கவிருக்கும் ஐஎஸ்எல் போட்டியின் முதல் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி – ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டமானது கொச்சியில் இன்று இரவு 7:30 மணியளவில் தொடங்க இருக்கிறது.