நடிகர் போண்டா மணிக்கு உதவி செய்வது போல் நடித்து ரூ.1 லட்சம் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
திரையுலகை பொறுத்தவரையில் உச்சத்தில் இருக்கும்போதே சம்பாதித்துக் கொள்ள வேண்டும். இதற்கு உதாரணமாக பல நடிகர், நடிகைகளின் வாழ்வு இருந்துள்ளது. வெளிப்பார்வைக்கு பிரமாண்டமாக தெரிந்தாலும், திரையுலகிலும் மற்ற தொழிலுலகில் இருப்பது போல பிரச்சனைகள் இருக்கவே செய்கின்றன.
தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர், போண்டாமணி. இவர் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக வடிவேலு, விவேக் போன்றவர்களின் நகைச்சுவை பட்டாளத்தில் போண்டாமணிக்கு பிரத்யேக இடமுண்டு. ஆனால், கடந்த சில வருடங்களாக போண்டாமணிக்கு படவாய்ப்புகள் வருவது மிகவும் குறைந்துவிட்டன.
இப்படியாக இருக்க சமீபத்தில் நடிகர் போண்டா மணிக்கு இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இந்த விவரத்தை முதலில் போண்டா மணியின் சக நடிகரும், வடிவேலு, விவேக் போன்றவர்களின் நகைச்சுவை பட்டாளத்தில் உள்ள மற்றொருவருமான பெஞ்சமின் கண்ணீர் மல்க ஒரு காணொளியின் வாயிலாக தெரிவித்தார். மேலும், உயிருக்கு போராடும் அவருக்கு நண்பர்கள் அவரது மேல் சிகிச்சைக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, அவருக்கு தமிழக அரசு மற்றும் சக நடிகர்கள் உதவினர். இதையடுத்து போண்டா மணி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
இந்நிலையில், போண்டா மணிக்கு உதவுவது போல் நடித்து ராஜேஷ் பிரித்தீவ் என்பவர் பழகி வந்தார். நடிகர் போண்டா மணியின் மனைவி மாதவி மருந்து வாங்கி வர கொடுத்த ஏடிஎம் கார்ட் மூலம் ராஜேஷ் பிரித்தீவ் நகை வாங்கி மோசடி செய்துள்ளார். ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.1 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.