சென்னை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி,
அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகக்கூடும். இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 22 ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுபெறக்கூடும்.
19.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்,தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை:
அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் பார்வூட் பகுதியில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சூரிய கிரகணம்; பழனி முருகன் கோயிலில் மாற்றியமைக்கப்பட்ட பூஜை நேரம்!