இந்த உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலி சாதனைகளை தகர்ப்பதை நோக்கமாக வைத்திருக்க கூடாது என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார்.
2022-ம் ஆண்டுக்கான இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இந்த உலகக் கோப்பைப் போட்டியானது நவம்பர் 13 வரை நடைபெறுகிறது.
இந்த இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டி அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி உள்ளிட்ட நகரங்களில் மொத்தமாக 45 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
மேலும், நவம்பர் 9,10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று நவம்பர் 13-ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த உலகக்கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி வரும் அக்டோபர் 23-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்த இருபது ஓவர் உலகக்கோப்பையை விராட் கோலி எப்படி எதிர்கொள்ள வேண்டும் என கவுதம் கம்பீர் அறிவுரை கூறியுள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது:
இந்த உலகக் கோப்பைத் தொடரில் விராட் கோலி ரன் குவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டுமே தவிர, சாதனைகளை தகர்ப்பதை நோக்கமாக வைத்திருக்க கூடாது. ஏனெனில், எத்தனை ரன்களை அடித்தோம், என்ன சாதனை படைத்தோம் என்பது இதுபோன்ற தொடர்களில் முக்கியமல்ல.
ஒரு போட்டியில் விராட் கோலி அரைசதம், சதம் அடிப்பதை விட, அணிக்கு தேவையான நேரத்தில் அவர் அடிக்கும் 30 – 40 ரன்களே மிகவும் உதவியாக இருக்கும். ஒரு வீரர் எத்தனை ரன்கள் அடித்திருந்தாலும், உலகக்கோப்பையை வென்றிருந்தால் அதுவே அவரது மிகப்பெரிய பெருமையாக இருக்கும்.
இவ்வாறு கம்பீர் தெரிவித்துள்ளார்.
கவுதம் கம்பீரின் இந்த பேச்சால், விராட் கோலியின் ரசிகர்கள் கடுப்பில் சமூகவலைதளங்களில் ட்விட் செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கைவிடப்பட்ட ஆட்டம்…கவலையில் இந்திய ரசிகர்கள்