கோல்டன் குளோப் விருதை வென்றமைக்காக ஆர்ஆர்ஆர் படக்குழு மற்றும் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணிக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளது.
பாகுபலி திரைப்படத்துக்கு பிறகு, இந்திய அளவில் முக்கிய இயக்குநராக வலம் வரும் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஆர்ஆர்ஆர் திரைப்படம் நாடு முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், இப்படமானது உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
மேலும், அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் சமீபத்தில் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது. அப்போது திரைப்படத்தைக் கண்ட அமெரிக்காவை சேர்ந்த திரையுலக பிரபலங்கள், விமர்சகர்கள் ஆர்ஆர்ஆர் படத்துக்கு தங்களின் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். மேலும், சமீபத்தில் ஜப்பானில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் அங்கு 10 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதைத்தொடர்ந்து, சமீபத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் ஆஸ்கருக்கு அடுத்த படியாக திரைத்துறையின் மிக உயரிய விருதாக பார்க்கப்படும் கோல்டன் குளோப் விருதின் நாமினேஷன் பட்டியலுக்கு இரண்டு பிரவின் கீழ் பரிந்துரைக்கப்பட்டது. அதன்படி, சிறந்த திரைப்படம் (ஆங்கிலம் அல்லாத) பிரிவிலும், சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் இத்திரைப்படம் தேர்வாகியது.
இந்நிலையில், அமெரிக்காவில் நடைபெற்ற கோல்டன் குளோப் விருதில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை ‘நாட்டு நாட்டு’ பாடல் வென்றுள்ளது. இதற்காக, ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணிக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, சமூக வலைதளங்களில் திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ‘அனைத்து இந்தியர்கள் மற்றும் உங்கள் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் கீரவாணி அவர்களே…இது ஒரு முன்னுதாரணம்’ எனப் பாராட்டியுள்ளார்.
மேலும், இளையராஜா, ‘எஸ்.எஸ்.ராஜமெளலி, கீரவாணி உங்களின் கடின உழைப்பிற்குக் கிடைத்த சரியான வெற்றி. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்’ என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
துணிவு மற்றும் வாரிசு ஓடிடி ரிலீஸில் மாற்றம் – வெளிவந்த தகவல்