ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி சூதாட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகம் முழுவதும் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் அவ்வபோது தற்கொலைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதனால், ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கோரி பல்வேறு கட்சியினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.
தமிழக அரசால் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசர சட்டம் தமிழக பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைப்பட்டுள்ளது. ஆனால், அது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் வழக்கு தொடர்பாக சிபிசிஐடி ஆறு ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸில் சூதாட்ட செயலிகள் என்ன அடிப்படையில் செயல்படுகிறது. செயலிகளை உபயோகிப்பவர்கள் விளையாட்டில் தோற்றதைத் தாண்டி பணம் இழந்ததற்கு வேறு காரணங்கள் இருக்கின்றனவா, ஆன்லைன் சூதாட்டம் விளையாடுபவர்கள் திட்டமிட்டு தோற்கடிக்கப்படுகின்றனரா உள்ளிட்ட கேள்விகள் இடம்பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் நிகழ்ந்த தற்கொலைகள் தொடர்பாக 17 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சி.சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் சிபிசிஐடி விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் தொகுப்பு எப்படி? மாநில அந்தஸ்து நிலைப்பாடு என்ன? – பதிலளித்த முதலமைச்சர்..