அரசு பேருந்துகளில் தீபாவளி பண்டிகை முன்பதிவு 50 ஆயிரத்தை எட்டியுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் அவரவர் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகிறார்கள். இதனால், பொதுமக்கள் பேருந்துகளில் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும் திட்டமிடுவது வழக்கம்.
அந்த வகையில் கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கான அரசு விரைவு பேருந்து பயணசீட்டு முன்பதிவு தொடங்கியது.
விருப்பமுள்ள பயணிகள் www.tnstc.in என்ற இணையதளத்தின் மூலம் பயண சீட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அரசு பேருந்துகளில் தீபாவளி பண்டிகை முன்பதிவு 50 ஆயிரத்தை எட்டியுள்ளது.
இதையும் படிங்க:‘வள்ளலார் 200’ சென்னையில் ஒரு மாத காலத்துக்கு சிறப்பு அன்னதானம்; எந்தெந்த கோயில்களில் தெரியுமா?
சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 21 ஆம் தேதி பயணம் செய்ய 23 ஆயிரம் பேரும், 22 ஆம் தேதிக்கு 21 ஆயிரம் பேரும், 23 ஆம் தேதிக்கு 4 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து இன்று இந்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்லக்கூடியவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு பேருந்து பயணம் அதிகரித்துள்ளது. சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து, அதிகாரிகளுடன் அமைச்சர் வருகிற திங்கள்கிழமை ஆலோசனை நடத்த உள்ளார்.
வழக்கம் போல் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இந்த ஆண்டு கூடுதல் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு 10 ஆம் தேதி வெளியாகும். முதல் கட்டமாக 450 அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
இதில், சென்னையில் இருந்து வெளியூர் செல்ல மட்டும் 40 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளி முடிந்து சென்னை திரும்ப 25 ஆம் தேதிக்கு 14 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.