இங்கிலாந்து இளவரசர் சார்லஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வியாழன் அன்று சார்லஸ் அவர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்ய்யப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இத்தொற்று உறுதியை இளவரசர் அலுவலக அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு முறை, 2020 ஆம் வருடம் மார்ச் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மீண்டும் சார்லஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது, பெரும் பேசு பொருளாய் மாறி இருக்கிறது.
கடந்த புதன்கிழமை மாலை, லண்டனின் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் ஒரு பெரிய வரவேற்பின் போது சார்லஸ் மக்களைச் சந்தித்தார் எனவும் வரவேற்பின் போது, அவர் தனது மனைவி கமிலாவுடன் இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால், அந்த நிகழ்ச்சியில் இருந்த அனைவரும் கொரோனா பரிசோதனையை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், இளவரசர் சார்லஸ் இதுவரை மூன்று முறை தடுப்பூசி செலுத்தி உள்ளார். மூன்று முறை தடுப்பூசி செலுத்தியும் சார்லஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது மக்களிடையே தடுப்பூசியின் மீதான நம்பிக்கையை இழக்க செய்வதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். மருத்துவர்கள், தடுப்பூசியால்தான் சார்லஸ் அவர்களுக்கு கொரோனா தொற்றின் வீரியம் குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்லஸ் அவர்கள் தற்போது, சுய தனிமைப்படுத்தலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.