இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
‘புதிய பிரதமரை தேர்தெடுக்கும் பணியினை தொடங்க வேண்டும்’ என செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
‘மக்களுக்காக பணியாற்ற புதிய அமைச்சரவையை உருவாக்கியுள்ளேன். புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் இருப்பேன்.’ என தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
போரிஸ் ஜான்சன் பதவி விலகப் போவதாக தகவல் வெளிவந்தது. தற்போது போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் இருந்து பல அமைச்சர்கள் நேற்றும் இன்றும் பதவி விலகியுள்ளனர். போரிஸ் ஜான்சனின் ஆட்சியால் அதிருப்தி அடைந்து பதவி விலகியுள்ளதாக பல அமைச்சர்களும் கூறி வருகின்றனர்.
போரிஸ் ஜான்சன் பதவி விலகியதை அடுத்து இங்கிலாந்து நாட்டின் பல்வேறு அரசியல் தலைவர்களும் தாங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
கன்செர்வேடிவ் கட்சியிலிருந்து சுமார் 50 அமைச்சர்கள் மற்றும் உதவியாளர்கள் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. இவர்கள் அனைவரும் கடந்த இரண்டு நாட்களில் பதவி விலகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் நேற்று (ஜூலை 06) தனது ராஜிநாமாவை அறிவித்தார். ரிஷி சுனக்கின் ராஜிநாமாவை அடுத்து நஜிம் சஹாவியை நிதியமைச்சராக போரிஸ் ஜான்சன் அறிவித்தார். ஆனால் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற 48 மணிநேரங்களில் போரிஸ் ஜான்சனை பதவி விலககோரி நஜிம் சஹாவி வலியுறுத்தி வந்ததாக தகவல்கள் வெளிவந்தன.
எதிர்க்கட்சி தலைவரான கெய்ர் ஸ்டார்மர் போரிஸ் ஜான்சன் பதவி விலக உள்ளதாக வெளிவந்த செய்தியினை ‘நாட்டுக்கு நல்லது’ எனக் கூறி வரவேற்றுள்ளார்.
மேலும், ‘இது பல நாள்களுக்கு முன்பே நடக்க வேண்டியது. பிரதமர் பதவிக்கு போரிஸ் ஜான்சன் தகுதியில்லாதவர்.’ என காட்டமாக கூறியுள்ளார்.
கன்செர்வேடிவ் கட்சியின் துணைத் தலைவர் ஜஸ்டின் டாம்வின்சன், ‘கன்செர்வேடிவ் கட்சிக்கு மிக முக்கியமான நபராக போரிஸ் ஜான்சன் இருந்துள்ளார். எனினும் அவரது பதவி விலகல் தவிர்க்க முடியாதது.’ எனக் கூறியுள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் வணிகத்துறை அமைச்சர் க்வாசி க்வார்டேங், ‘நாம் மிகவும் விரைவாக செயல்பட்டு நாட்டின் புதிய பிரதமரைத் தேர்வு செய்ய வேண்டும். இழந்து போன நம்பிக்கையை மீட்டெடுப்பவாராகவும், நாட்டுக்கு ஏற்பட்டுள்ள துயரங்களைத் துடைத்து, அனைவருக்கும் உதவி செய்யும் நபரை நாம் தேர்வு செய்ய வேண்டும்.’ என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கிறிஸ் பிஞ்சர், சென்ற மாதம் மதுபோதையில் இரண்டு ஆண்களிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து அவர் தனது நாடளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
கிறிஸ் பிஞ்சரின் செயல்பாடு குறித்து போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கேட்டிருந்த நிலையில், இங்கிலாந்து நாட்டின் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் சாஜித் ஜாவித் ஆகியோர் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனர். இது போரிஸ் ஜான்சனுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்பட்டது.
இதனையடுத்து பல அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர். தற்போது இங்கிலாந்து பிரதமர் பதவியை போரிஸ் ஜான்சன் ராஜிநாமா செய்துள்ளார். 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்று பிரதமரானார். அவருடைய ஆட்சிக்காலம் 2024ம் ஆண்டு வரை உள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்து பதவி விலகும் இங்கிலாந்து அமைச்சர்கள்!!