ரத்தத்தை வைத்து வரையப்படும் ஓவியத்தால் எச்.ஐ.வி. கூட பரவ வாய்ப்பு இருப்பதால் அலட்சியமாக செயல்பட வேண்டாம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் மக்கள் மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், ஓவியத்திற்காக எடுக்கப்படும் ரத்தம் முறையான பாதுகாப்பு இல்லாதது என்றும் ரத்தம் எடுக்க பயன்படுத்தப்படும் ஊசி எத்தனை பேருக்கு பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியாது என்றும் கூறினார்.
மேலும், ரத்தத்தை திறந்த நிலையில் கையாளும் போது, எச்.ஐ.வி. போன்ற நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களிடம் இருந்து எடுக்கப்படும்போது அதனால் பலருக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், சென்னை வடபழனி, தி.நகர் பகுதிகளில் இருக்கும் பிளட் ஆர்ட் நிறுவனங்களை மருத்துவத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதாகவும், அங்கு ரத்த ஓவியத்திற்கு பயன்படுத்தப்படும் ரத்த குப்பிகள், ஊசிகள் மற்றும் அவர்கள் வரைந்து வைத்திருந்த படங்கள் போன்றவற்றை பறிமுதல் செய்ததாகவும் கூறினார்.
மேலும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், பிளட் ஆர்ட் வரையும் பணியை நிறுத்திக்கொள்ளுமாறும், ஓவியத்தை வரைவதற்கு ஏராளமான வழிகள் இருப்பதாகவும், ஒருவருடைய ரத்தத்தை எடுத்து தான் வரைய வேண்டும் என்று இல்லை எனவும் அறிவுரை கூறினார்.
ரத்தம் என்பது பல உயிர்களை காக்கும் புனிதத் தன்மை உடையது. ரத்த தானம் செய்வது என்பது தற்போது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது என்றாலும், அதனை இப்படி வரைந்து வீணாக்குவது சரியானது இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
வெங்கட் பிரபு – நாக சைதன்யா இணைந்த படம்; வெளிவந்த ரிலீஸ் தேதி..