நடந்து முடிந்த உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தது. அங்கு பிரதான கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி 403 தொகுதிகளில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் வெறும் 12.88 சதவீத வாக்குகளை மட்டுமே அக்கட்சி கைப்பற்றியது. இது சென்ற தேர்தலைவிட 7.12 சதவீதம் குறைவு ஆகும்.
தேர்தல் முடிந்தவுடன் மாயாவதி பாஜகவின் பி-டீமாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அவர் பாஜகவுக்கு ஆதரவாக ஓட்டுகளைப் பிரித்து பாஜக இந்த தேர்தலில் வெற்றிபெற மறைமுகமாக உதவியுள்ளார் என குற்றம் சாட்டி வந்தனர். அந்த சமயத்தில் சிவசேனா கட்சியின் எம்.பி சஞ்சய் ராவத் பாஜக வெற்றிக்காக உழைத்த மாயாவதி மற்றும் ஒவைசிக்கு பத்மபூஷன், பாரதரத்னா விருதே கொடுக்கலாம் என்று நக்கலாகக் கூறி இருந்தார்.
இதன் பிறகு மாயாவதி பற்றிய இந்த கருத்து நாடு முழுவதும் பரவ ஆரம்பித்தது. உத்தரபிரதேச தேர்தலின் போது ஒரு தொலைக்காட்சி சேனலின் நேர்காணலுக்கு பேட்டி அளித்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாயாவதி பற்றி பேசியிருந்தார். அதில் அவர் மாயாவதிக்கு வாக்கு வங்கி இல்லை என்று கூறுவது முட்டாள்தனம் என்றும் அவருக்கு பட்டியலின மக்கள் மற்றும் இஸ்லாமிய மக்களின் வாக்குகள் கணிசமாக உள்ளன என்றும் கூறியிருந்தார்.
அதற்கு மாயாவதியும் அமித்ஷாவுக்கு நன்றி தெரிவித்து இருந்தார். இது கட்சியினரிடையே பாஜகவுக்கும் மாயாவதிக்கும் ஏதோ ரகசிய தொடர்பு உள்ளது என்ற சந்தேகத்தை எழுப்பியிருந்தது. இந்நிலையில் மாயாவதிக்கு ஜனாதிபதி பதவியை பாஜக கொடுக்க உள்ளது என்று கிளம்பிய கருத்தினால் மேலும் சந்தேகங்கள் வலுக்கத் தொடங்கின.
வருகின்ற ஜூலை மாதத்துடன் தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால் புதிய ஜனாதிபதி யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான் இந்த சர்ச்சையும் எழுந்துள்ளது.
இந்த சர்ச்சைகளுக்கு நேற்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி பதில் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ் மூலமாக பாஜக நமது கட்சிக்குள் தவறான பொய் பிரச்சாரங்களைச் செய்து உ.பியில் ஆட்சியைப் பிடித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் மாயாவதியை ஜனாதிபதி ஆக்கி விடுவோம் எனக்கூறி ஆட்சியைப் பிடித்துள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார் மாயாவதி.
மேலும், தான் பிறக்கட்சிகள் கொடுக்கும் பதவிகளை ஏற்றுக்கொண்டால் அது பகுஜன் சமாஜ் கட்சிக்கு முடிவாக அமைந்து விடும், அப்படி பதவியை ஏற்றுக்கொண்டால் பிற்காலத்தில் அக்கட்சியினர் தன்னை தவறாக வழிநடத்தக்கக்கூடும் எனவும் கூறியுள்ளார்.
நான் கன்ஷிராமின் சீடன் என்று கூறிய மாயாவதி, அவரை சமீப காலங்களில் ஜனாதிபதி பதவிகள் பலமுறை தேடிவந்தபோதும் அவர் அதனை மறுத்து விட்டார். அதேபோல நானும் பதவிகளை மறந்து கட்சியை நாடெங்கும் பரவச் செய்வதிலேயே கவனம் செலுத்துவேன் எனவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து தொண்டர்கள் கூறுகையில் சமீப காலங்களில் அவர் பாஜகவின் பி-டீம் என்ற கருத்து கட்சிக்குள் வலுப்பெற்று வந்தது. இந்நிலையில், மீதமிருப்பவர்களை தக்க வைத்துக் கொள்ள இப்படி பேசியிருக்கிறார் என கூறுகின்றனர்.