தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8 ஆம் தேதி புயலாக உருவெடுத்தது. இதற்கு அசானி புயல் என்று பெயரிடப்பட்டது. இந்தப் புயல் மேற்கு மற்றும் வட மேற்கு பகுதிக்கு நகர்ந்து ஆந்திர மாநிலம் காக்கிநாடா- விசாகப்பட்டினம் கடற்கரை பகுதிக்கு வந்து சேர்ந்து பின் ஒடிசா கடற்கரை நோக்கி செல்லும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தீவிர புயலாக நிலைகொண்டிருந்த அசானி புயல், வலுவிழந்த புயலாக ஆந்திர மாநிலம் மச்சிலிபட்டணத்துக்கு தென்கிழக்கே 60 கி.மீ தொலைவில் நிலைக் கொண்டிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை, இந்தப்புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என தெரிவிக்கபட்டுள்ளது.
ஆந்திர கடலோரப் பகுதியில், 95 கி.மீ வேகத்தில் காற்று வீசக் கூடும் என்றும் ஒடிசா கடற்கரை பகுதியில் 65 கி.மீ வரையிலும் காற்று வீசக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம், குண்டூர், கிருஷ்ணா, விசாகப்பட்டினம், கோதாவரி போன்ற பகுதிகளில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அசானி புயலின் காரணமாக ஆந்திர மாநிலத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு இன்று நடக்கவிருந்த பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக ஆந்திர மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்தத் தேர்வுகள் மே மாதம் 25 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் தேர்வுகள் எப்போதும் போல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீட்ருட்ட கிள்ளிப் பார்த்து வாங்கனும்; கேரட்ட கீறிப் பார்த்து வாங்கனும்; மாம்பழத்த…..?