ஆந்திராவில் உள்ள 13 மாவட்டங்களில் இருந்து புதிதாக 13 மாவட்டங்களைப் பிரித்து, மாவட்டங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி நடவடிக்கை எடுத்துள்ளது ஆந்திர அரசு.
ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 4 திங்கட்கிழமையான இன்று ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இருந்து புதிய 13 மாவட்டங்களை உருவாக்கி உத்தரவிட்டார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.
ஆந்திர மாநிலத்தின் சிறந்த நிர்வாகம் மற்றும் அதன் பகுதிகளின் மேம்பாட்டிற்காகவே எல்லைகள் வரையறுக்கப்பட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது ஆந்திர அரசு.
இந்த அறிவிப்பின்படி ஆந்திராவில் உள்ள மாவட்டங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1974ன் பிரிவு 3ன் கீழ் மறுசீரமைப்பு செய்யப்படுகின்றன. இதற்கான முன்னெடுப்புகள் மற்றும் கோரிக்கைகள் மக்களிடம் இருந்தே வந்துள்ளன. இதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் 30 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
நடந்து முடிந்த குடியரசு தினவிழாவில் விஜயவாடா நகராட்சி அலுவலகத்தில் கொடியேற்றி அதன் பின்பு பேசிய ஆந்திர மாநிலத்தின் கவர்னர் பிஷ்வபூஷன் ஹரிஷந்தன் “வருகின்ற ஏப்ரல் 2 தெலுங்கு வருடப்பிறப்பு உகாதி தினமாகிய அன்று ஆந்திர மாநிலம் புதிய மாவட்டங்களுடன் செயல்படும்” என்று கூறினார். இதன் மூலம் அந்த மாநிலத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது.
இதற்கு முன்னதாகவே அவசர அவசரமாக விர்ச்சுவல் முறை மூலம் அமர்ச்சர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இதுகுறித்த முறையான ஒப்புதலைப் பெற்றிருந்தார். புதிய மாவட்டங்களை உருவாக்குவது குறித்து கடந்த 2019ஆம் ஆண்டு தனது தேர்தலுக்கு முந்தைய அறிக்கையில் தெரிவித்து இருந்தார் அவர். அதன்படி கடந்த 2020ஆம் ஆண்டு தலைமை செயலாளர் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகள் குழுவை நியமித்து இதற்கான முன்மொழிவை ஆராய்ந்து அதற்கான வழிமுறைகளை உருவாக்கினார்.
ஒவ்வொரு மாவட்டத்தின் எல்லையும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியைக் குறிக்கும் என்று கூறி இருந்தார் அவர். ஆந்திராவில் 25 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன. அதன்படி 25 மாநிலங்களே உருவாக்க முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பழங்குடியினருக்கான நாடாளுமன்றத்தொகுதி பரப்பளவில் மிகவும் பெரியதாக இருப்பதால் அதனை இரண்டு பகுதிகளாக பிரிக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதன் அடிப்படையில்தான் 26 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதனை நடைமுறைப்படுத்த 3 ஆண்டுகள் அரசு எடுத்துக்கொண்டாலும், தற்பொழுது நடவடிக்கை இருப்பது பாராட்டுக்குரியது என்று அம்மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.