அந்தமான் நிக்கோபார் தீவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜூபைர் அகமது பள்ளி வளாகம் ஒன்றில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள விம்பர்லி கஞ்ச் பகுதியில் வசித்து வந்தார் பத்திரிகையாளர் ஜூபைர் அகமது. இவரின் வயது 48. இவர் தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்த காவல்துறை, இம்மரணம் குறித்து விசாரணை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஜூபைர் அகமது தற்கொலை குறித்து அவரது உறவினர் சித்திக் கூறியதாவது :
கடந்த வியாழக்கிழமை மாலை 3.30 மணி அளவில் வீடு திரும்பிய ஜூபைர், அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் நேரம் கழித்துவிட்டு, அவரது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வெளியே சென்றார்.
இரவு அவர் வீடு திரும்பவில்லை. நாங்கள் அவரைத் தேடும்போது, பள்ளி வாளாகத்தில் கழுத்தில் கயிறு சுற்றப்பட்ட நிலையில் அவரது உடல் இருந்தது. தடையவியல் நிபுணர்கள் ஜூபைரின் பாக்கெட்டுகளில் இருந்து இரு பென்-டிரைவுகளை கண்டறிந்துள்ளனர்.
ஜூபைர் கடந்த பத்து வருடங்களாக மன அழுத்தத்தினால் அவதிப்பட்டு வந்தார். அதற்கான மருத்துவ சிகிச்சையையும் பெற்று வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரை நான் சந்தித்தேன். முழுநேர பத்திரிகையாளராக செயல்பட முடியவில்லை என்ற அழுத்தம் அவருக்கு இருந்ததாக நான் நினைக்கிறேன். மேலும், ஜூபைர் செய்தித்தாள் நிறுவனம் ஆரம்பிக்க முயன்றுக்கொண்டிருந்தார். அதற்கு ‘சண்டே ஐலேண்டர்’ என்ற பெயரையும் அவர் வைத்திருந்தார். இத்திட்டத்துக்கு நாங்கள் உதவுவதாகவும் தெரிவித்திருந்தோம்.
மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பதை எங்களால் நம்பமுடியவில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
2020-ம் ஆண்டு கொரோனா தொற்று தீவிரமாக பரவிய சமயத்தில் ஜூபைர் அகமது, கொரோனா பற்றி ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். இவர் எழுப்பிய கேள்வியை அடுத்து அந்தமான் நிக்கோபார் காவல்துறையானது தவறாக எச்சரிக்கை விடுத்தல் போன்ற பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் இவரை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
சூடுபிடிக்கும் இலங்கை அரசியல்: அதிபர் மாளிகை முற்றுகை