பெண்களின் சிறப்புகளை போற்றும் வகையில் உலக மகளிர் தினம் இன்று கொண்டாடுகின்ற நிலையில், உலகெங்கும் வாழும் மகளிருக்கு உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்து தன் பதிவை ஆரம்பித்தார், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி இராமதாஸ்.
போர்க்குணம் மிக்கவர்கள்
அதன் பின்னர் உலகம் எங்குமே பெண்கள் பலவீனமானவர்கள் என்ற பொய்யான நம்பிக்கை நிலவி வருகிறது என்றும் ஆண்களைவிட பெண்களுக்குத் தான் போர்க்குணம் அதிகம் என்றும் ஆண்கள் வென்று விட்டதாக பெருமிதப்பட்டுக் கொண்டாலும், அவர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருப்பது பெண்கள் தான் என்றும் சங்க காலத்திலிருந்து நிகழ்காலம் வரை இதற்கு ஏராளமான நாயகியரை உதாரணமாகக் கூற முடியுமென்றும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், ‘உலகிலேயே மகளிருக்கு மிக அதிக மரியாதை வழங்கும் சமுதாயம் தமிழ்ச் சமுதாயம். பெண்களை கடவுளுக்கும் மேலாக வைத்து வழிபடும் சமுதாயமும் தமிழ்ச் சமுதாயம் தான். மனித நாகரிகங்கள் வளரக் காரணமாகவும், வாழ்வாதாரம் மற்றும் பாசன ஆதாரமாகவும் திகழும் நதிகளுக்குக் கூட பெண்களின் பெயரை சூட்டியதிலிருந்தே மகளிரை தமிழ் சமுதாயம் எந்த அளவுக்கு மதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம். நடைமுறை வாழ்விலும் அதே மரியாதை வழங்கப்பட வேண்டும்’ எனவும் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தனது பதிவின் மூலம் கேட்டுக்கொண்டார்.
பேசப்படாத கதாநாயகர்கள்
மனித வாழ்வில் பெருமை பேசப்படாத கதாநாயகர்கள் பெண்கள் தான் என்றவர், அவர்கள் கொண்டாடப்படவும், போற்றப்படவும், கவுரவிக்கப்படவும், முன்னோடியாக மதிக்கப்படவும் ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அவற்றை நாம் அங்கீகரிக்கவில்லை என்பது தான் எவராலும் மறுக்க முடியாத உண்மை என்பதையும் தெரிவித்தார்.
குறிப்பாக குடும்பங்களில் பெண்கள் எனப்படுபவர்கள் ஊதியம் பெறாத பணியாளர்கள் என்று கருதப்படும் நிலை மாற வேண்டும். அவர்களுக்கு உரிய அங்கீகாரங்கள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகம் மகிழ்கிறது
“மனிதகுலத்தை ஈன்றெடுத்து, வளர்த்து, முன்னேற்றுபவர்கள் பெண்கள். அவர்கள் இல்லாவிட்டால் மனிதகுலத்திற்கு முன்னேற்றம் கிடைத்திருக்காது. ஆணின் வெற்றிக்குப் பின்னால் பெண் இருக்கிறாள் என்ற பழங்கதையை ஒதுக்கி வைத்து விட்டு, பெண்கள் சாதனைகளை படைத்துக் குவிக்கிறார்கள்; அதை அங்கீகரித்து இந்த உலகம் மகிழ்கிறது என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும். அந்த உன்னத நோக்கம் நிறைவேறுவதற்காக கடுமையாக உழைக்க இந்நாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும்” என அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க மக்களே ; ‘ பறவையாக பெண்கள் அடைபட, கூண்டை உடைத்தல் அத்தியாவசியமாகிறது’ – மகளிர் தின சிறப்பு கட்டுரை!