இந்தியாவில் புகைப்பிடிப்பதற்கான வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என அன்புமணி இராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
நியூசிலாந்து நாடானது ‘புகைப்பிடிக்காத நாடு’ என்ற இலக்கை நோக்கி பயணித்து வருகிறது. இந்த இலக்கை அடைய பல்வேறு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், நேற்று ‘புகைப்பிடிக்காத நாடு’ என்ற இலக்கை அடைய ஏதுவாக ஒரு புதிய சட்டத்தை நியூசிலாந்து அரசு அமல்படுத்தியுள்ளது. அந்தச் சட்டத்தின்படி, நியூசிலாந்தில் இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கு வாழ்நாள்தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டமானது, ஜனவரி 1, 2009 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் புகையிலை விற்கக் கூடாது என்று தெரிவிக்கிறது. நியூசிலாந்து நாட்டின் இச்சட்டமானது உலக அளவில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இதுகுறித்து தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவொன்றைபதிவிட்டுள்ளார்.
அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நியூசிலாந்தில் 2009-ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்தவர்கள், அதாவது 14 வயதுக்குட்பட்டவர்கள் புகைப்பிடிக்கவும், அவர்களுக்கு சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை விற்கவும் தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. உலகில் இத்தகைய சட்டத்தை இயற்றிய முதல் நாடு நியூசிலாந்து தான்!
நியூசிலாந்து நாட்டின் சட்டத்தால் புகைப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறையும். 2050-ஆம் ஆண்டில் 40 வயதானவர்களால் கூட புகைக்க முடியாது. 2023-ஆம் ஆண்டு இறுதிக்குள் நியுசிலாந்தில் சிகரெட் விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கை 6000-லிருந்து 600 ஆக குறைக்கப்படும்!
புகைப்பிடிப்போர் எண்ணிக்கை குறைவதால், நியூசிலாந்து மக்களின் மருத்துவத்திற்காக செலவிடப்படும் தொகை ஆண்டுக்கு ரூ.40ஆயிரம் கோடி(5 பில்லியன் டாலர்) குறையும். ஒரு சட்டத்தால் இவற்றை விட பெரிய நன்மையை ஒரு நாட்டுக்கு செய்து விட முடியாது. அதனால் தான் இது வரலாற்று சிறப்புமிக்க சட்டம்!
புகைப்பழக்கத்தை படிப்படியாக ஒழிப்பதற்கான சட்டம் நியூசிலாந்தை விட இந்தியாவுக்கு தான் அதிகம் தேவை. எனவே, இந்தியாவில் புகைப்பிடிப்பதற்கான வயதை 21 ஆக உயர்த்த வேண்டும். 2001-ஆம் ஆண்டுக்கு பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்க தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும்!
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டின் டாப் 10 திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா? – வெளிவந்த தகவல்..