புதுச்சேரி அரசின் வழக்கறிஞர்கள் நியமனத்தில் மாநில உரிமை பறிக்கப்பட்டுள்ளதாக அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் குற்றச்சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன், கடந்த திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் முன்னாள் முதல்வர் நாராயணசரியின் மலிவு விளம்பரம் மோதல் காரணமாக பறிபோன மாநில உரிமைகள் தற்போதைய ஆட்சியிலும் தொடர்வது வருத்தம் அளிக்க கூடிய ஒன்றாகும் என்றும், கடந்த திமுக காங்கிரஸ் ஆட்சியில் பல விதத்திலும் பறிபோன மாநில உரிமைகள் மீட்டெடுக்கப்படும் என்ற நம்பிக்கையில் என்.ஆர்.காங்கிரஸ், அதிமுக, பாஜக உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் வாக்களித்து ஆட்சியை கொடுத்துள்ளனர். கடந்த ஆட்சியில் பறிபோன மாநில உரிமைகளை பெற்றுத்தருவது மக்களின் நம்பிக்கையை பெற வேண்டியது மத்தியில் ஆட்சியில் உள்ள கட்சியான பாஜகவின் கடமையாகும்.
ஆனால் அனைத்து விஷயங்களிலும் தொடர்ந்து மாநில உரிமைகள் பறிபோவது எதிர்கால புதுச்சேரிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றார். மேலும் புதிய அரசு பதவியேற்றவுடன் அரசின் எண்ணத்திற்கு ஏற்ப செயல்படும் அரசு வழக்கறிஞர்கள் புதியதாக நியமிக்கப்படுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் புதிய அரசு பதவியேற்று ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு அரசு வழக்கறிஞர்கள் தேர்வு மூலம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசு வழக்கறிஞர்கள் நியனம் என்பது எந்த மாநிலத்திலும் தேர்வுகள் மூலம் நியமிக்கப்படுவது இல்லை. அடாக் அடிப்படையில் நியமிக்கும் பதவியாகும். அப்படி நிரப்பப்படாமல் தேர்வு நடத்தி அதற்குரிய மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படாமல் தேர்வு எழுதி 7 மாதத்திற்கு பிறகு புதுச்சேரி வழக்கறிஞர்கள் மட்டுமல்லாமல் சென்னை மற்றும் டெல்லியில் உள்ள வழக்கறிஞர்களும் புதுச்சேரி அரசின் வழக்கறிஞர்களாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.
அரசு வழக்கறிஞர்கள் நியமனத்திலும் நம் மாநில உரிமை பறிக்கப்பட்டுள்ளது. மாநில உரிமைகளை விட்டுக்கொடுப்பது மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய அநீதி என்றும், துணைநிலை ஆளுநரும், முதலமைச்சரும் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என என கூறினார்.
பத்து ஆண்டு காலம் பாழ்படுத்தியதை மீட்டெடுப்பது என்பது சாதாரண காரியம் அல்ல! முதல்வர் ஸ்டாலின்