திருநெல்வேலி மாவட்டத்தில், அதன் சந்திப்பில் வைக்கப்பட்டுள்ள மகாகவி பாரதியாரின் திருவுருவச்சிலை பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்த நிலையில் இருப்பதை கண்டு பாரதியார் மீது அன்பு கொண்டவர்களும், பல்வேறு தரப்பினரும் வேதனையடைந்து, அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
தேசிய கவிஞர் என்று சொன்ன மறுகணம் நமது நினைவுக்கு வருபவர் மகாகவி சுப்ரமணிய பாரதியார். இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் மகாகவி அவர்களின் பங்கு அளப்பரியது.
ஆங்கிலேயர்களை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தை பல விதங்களில் மக்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களின் மனதில் சுதந்திர தாகத்தை ஆழமாக பதியவைத்தவர்.
களத்தில் போராடுவது, தனது பாடல் வரிகளால் மக்களை கட்டிப் போட்டது, நாடகத்தின் வாயிலாக மக்கள் மனதில் எளிமையாக கருத்தை பதிவிட்டது, பெண் அடிமைத்தன ஒழிப்பு போன்ற சமூக அக்கறை கொண்ட கொள்கைகளை விதைத்தவர்.
இப்படிபட்ட ஒரு மாபெரும் தலைவனின் 101-வது நினைவு தினம் ஞாயிறு அன்று அனுசரிக்கப்பட்டது. பாரதியார் பிறந்த நெல்லை மாவட்டத்தில் அவர் படித்த பள்ளி அருகில் உள்ள பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வதற்காக பொதுமக்களும் அரசியல் கட்சி தலைவர்களும் அங்கு வந்தார்கள்.
ஆனால் அவரது சிலை சரியாக பராமரிப்பு செய்யப்படாமல், சிதிலமடைந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். மேலும் மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் இதனை உடனே சரிசெய்து தருமாறு அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.