நடிகர்கள் ஒன்றும் பெரியார், கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர் போன்ற சிந்தனையாளர்களோ, அறிஞர்களோ இல்லை என நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் திரையுலகில் மூத்த நடிகர்களுள் ஒருவர் சத்யராஜ். இவர் கதாநாயகனாக பல வெற்றி திரைப்படைகளை தமிழ்த்திரை உலகிற்கு கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, இவரின் நடிப்பில் வில்லத்தனமான கதாபாத்திரங்கள் இன்றளவும் மக்கள் மனதில் நின்று பேசுகிறது. அந்தளவிற்கு தனது நடிப்பால் மக்களைக் கவர்ந்தவர் சத்யராஜ்.
சத்யராஜ் பொதுவாக திராவிட சித்தாந்தவாதியாகக் தன்னைக் காட்டிக்கொள்வார். அதே நேரத்தில் சமூக பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுப்பவராக இருந்து வருகிறார். இவர் பெரியாரின் வாழ்க்கை வரலாறான ‘பெரியார்’ திரைப்படத்தில் நடித்து தன்னை தீவிர பெரியார்வாதியாக காட்டிக்கொண்டார். அதோடு, தனது பகுத்தறிவு பேச்சால் பிரபலமானவர்.
இந்நிலையில், மனதின் மையம் என்ற அறக்கட்டளையின் ஒரு பகுதியான நேசம் சேவை மையம் தொடக்க விழா ஈரோட்டில் நேற்று (செப்டம்பர் 11) நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்துக் கொண்டு சத்யராஜ் பேசியதாவது:
தற்கொலை தடுப்பு என்பது இன்றைக்கு மிக அவசியமான விஷயம். தற்கொலைக்கு முக்கிய காரணம் வறுமை, உறவில் சிக்கல், மூட நம்பிக்கைகள், சாஸ்திரம், சடங்கு, சம்பிரதாயம், பெண் அடிமைத்தனம், பண்பாடு, கலாசாரம், நாகரீகம், பொருளாதார சிக்கல், மனநலம் பாதித்த சமூகம் தரும் மன அழுத்தம் போன்றவை தான்.
நீட் தேர்வு கூடாது என்ற எண்ணத்தில் இருப்பவன் நான். முதல் தலைமுறை பட்டதாரிகளை நீட் தேர்வு பாதிப்பதால், அது அவசியம் இல்லை. மருத்துவர்கள், வக்கீல்கள் குழந்தைகளை அதே பதவிக்கு கொண்டு வருவது மிகவும் எளிது. ஆனால், படிக்க தெரியாத பெற்றோரின் குழந்தைகள் அவர்கள் படித்து முன்னுக்கு கொண்டுவருவது மிக முக்கியம்.
மனநலம் மேம்படுத்தினால் உடலில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாகி விடும். உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மருத்துவர்களிடம் செல்கிறோம். ஆனால், மனநலம் குன்றினால் மட்டும் மருத்துவர்களிடம் செல்வதில்லை. எனக்கு மன அழுத்தம் ஏற்பட்டால், எம்.ஜி.ஆரின் பாடல்களை கேட்பேன்.
அதன் மூலம், நிறைய தெளிவு கிடைக்கும். நடிகர்கள் என்றால் எல்லாம் தெரிந்தவர்கள் என நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், நடிகர்களுக்கு நடிப்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது.
நடிகர்கள் ஒன்றும் பெரியார், கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர் போன்ற சிந்தனையாளர்களோ, அறிஞர்களோ இல்லை. எங்களுக்கு சாப்பாடு போடுங்கள். ஆனால். எங்களை தலையில் தூக்கி வைத்து கொண்டாட வேண்டாம். அது தேவையில்லை.
இவ்வாறு, அவர் பேசியுள்ளார்.