10 சதவிகிதம் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் கூடுகிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிப்பதற்கான வழிவகை செய்யும் அரசியல் சட்டத் திருத்தம், கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டது.
இந்த இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்று மாண்பமை உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்த அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டமானது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 12-ம் தேதி நடைபெறவுள்ளது.
அந்த அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் சார்ந்து வெளிவந்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
இடஒதுக்கீட்டு முறை சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிராக அமைவதோடு, சமூக நீதிக் கொள்கைக்கும் மாறானது என்பதால், இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் விவாதித்து முடிவு எடுப்பதற்கு ஏதுவாக, வருகின்ற 12-11-2022 (சனிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் பத்தாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களது தலைமையில் நடைபெறவுள்ளது.
இப்பொருள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்க முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். மேற்படி ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்றக் கட்சியின் சார்பாக இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழிசை ஒரு எல்.கே.ஜி? முரசொலி படிக்க கூடிய பத்திரிகையே இல்ல.. மாறி மாறி சரியான அட்டாக்!