எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. அதுபோல அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் கூடுதல் மனுக்களும் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி சென்னையில் உள்ள வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் அளித்திருந்த 23 தீர்மங்களைத் தவிர வேறு தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும், பொதுக்குழு கூட்டம், ஒற்றைத்தலைமை குறித்த சலசலப்புடனே ஆரம்பித்தது. உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவையும் மீறி, அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஒற்றைத்தலைமை குறித்த சர்ச்சைகள் பொதுக்குழு கூட்டம் முடியும் வரை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வதின் ஆதரவாளர் சண்முகம், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவிருந்த நிலையில் அந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், அதிமுக உள்கட்சி விவகாரங்களில் தலையிட முடியாது எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், 11ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம் அளித்திருந்த கூடுதல் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது.
பொதுக்குழு சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு தனி நீதிபதியை நாடவும் என உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக கருதி வவிசாரிக்க வேண்டுமென நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்திருந்தார்.
எனினும், உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென நீதிமன்றத்தை கட்டாயப்படுத்த முடியாது என நீதிபதி கிருஷ்ணன் புதன்கிழமை நடந்த விசாரணையில் கூறினார். இதையடுத்து இந்த வழக்கை (ஜூலை 07) இன்று ஒத்திவைத்திருந்தர். இந்நிலையில், இருநீதிபதிகள் அடங்கிய அமர்வில் இருந்த கூடுதல் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக சின்னத்தை முடக்க கோரிய வழக்கு- ரூ.25,000 அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம்