நடிகர் அஜித்குமாரின் அடுத்த படத்தை மகிழ்திருமேனி இயக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளிவந்திருந்த நிலையில் இப்போது அப்படத்தின் பூஜை முடிந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நடிகர் அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளிவந்த துணிவு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் பெரும் வேட்டையை நிகழ்த்தியது.
துணிவைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமாரின் 62-வது திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. மேலும், இத்திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘ஏகே-62’ என்றும் பெயரிடப்பட்டது.
ஆனால், சில காரணங்களால் விக்னேஷ் சிவன் ஏகே-62 திரைப்படத்தில் இருந்து விலகியதாக தகவல்கள் வந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக, விக்னேஷ் சிவனும் தனது ட்விட்டர் பக்கத்தின் பயோவில் ‘ஏகே-62’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததை நீக்கினார்.
இதைத்தொடர்ந்து, அஜித்குமாரின் 62 ஆவது திரைப்படத்தை தடம், கலகத்தலைவன் போன்ற திரைப்படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இயக்கவுள்ளார் என்று தகவல்கள் தீயாய் பரவின.
இந்நிலையில், ஏகே-62 படத்தின் பூஜை நேற்று நடைபெற்றதாகவும் இதில் மகிழ்திருமேனி கலந்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதேநேரம், ஏகே-62 படத்தில் அனிருத் இசையமைப்பாளராகவும், நிரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும், இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க அருண் விஜய் மற்றும் அருள்நிதியை நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
பைக் டாக்ஸிக்கு தடையா? ரேபிடோ இனி இல்லையா? – வெளிவந்த அதிரடி உத்தரவு!