தில்லியில் காற்று மாசுபாடு அதிகரிப்பு காரணமாக அம்மாநில தொடக்க பள்ளிகளுக்கு மட்டும் நாளை முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் கடந்த சில நாட்களாகவே காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதற்கான அம்மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், காற்றின் தரம் மிக மோசமான நிலையில் தான் இருந்து வருகிறது.
குறிப்பாக, தில்லியில் குளிர்காலத்தில் தான் காற்று மாசுபாடு அதிகரிக்கும். இந்நிலையில் இந்த ஆண்டு குளிர் காலம் தொடங்கும் முன்பே காற்றின் தரம் பேராபத்தை விளைவிக்க கூடியதாக மாறி வருகிறது.
தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தபோதிலும் பொதுமக்கள் தடையை மீறி பட்டாசு வெடித்ததால் காற்று மாசுபாடு இன்னும் அதிகமானது.
இதனால், குழந்தைகளின் நலன்கருதி குழந்தைகள் நல வாரியம் பள்ளிகளை உடனடியாக மூட வேண்டும் என கோரிக்கை வைத்து வந்த நிலையில், தற்போது தில்லி அரசு தொடக்க பள்ளிகளுக்கு நாளை முதல் விடுமுறை அளித்துள்ளது. மேலும் 6 ஆம் வகுப்பிலிருந்து படிக்கும் மாணவர்களுக்கு வெளிப்புற செயல்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதேசமயம் காற்றுமாசுபாட்டை குறைக்க ஒற்றைப்படை, இரட்டைப்படை வாகனப் பதிவெண் முறையில் வாகனங்களை இயக்க அனுமதிப்பது குறித்தும் பரிசீலித்து தில்லி அரசு வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே காற்று மாசுபாடு அதிகரிப்பு காரணமாக தில்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேச மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் நவம்பர் 10 ஆம் தேதி நேரில் வந்து ஆஜராக வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆவின் பால் விலை உயர்வு: வரவேற்பையும், கண்டனத்தையும் ஒரே மாதிரி தெரிவித்த அன்புமணி ராமதாஸ்!