தீபாவளிக்கு ரூ.200 கோடிக்கு ஆவின் இனிப்பு வகைகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த வருடம் தீபாவளி வரும் அக்டோபர் 24-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனால், பட்டாசு, இனிப்பு போன்றவைகளின் தயாரிப்பு பணிகள் மும்முரமடைந்துள்ளது. இந்நிலையில், அரசு நிறுவனமான ஆவினும் இனிப்பு தயாரிப்புகளை தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் ஆண்டில் தீபாவளி பண்டிகை ஆவின் இனிப்புகள் விற்பனை ரூ. 81 கோடியாக உயர்த்தியது. வரும் தீபாவளி பண்டிகையையொட்டி, ஆவின் நிறுவனத்தின் இனிப்புகளை ரூ.200 கோடிக்கு விற்பனை செய்ய நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், துபாய் போன்ற பல்வேறு நாடுகளுக்கும் இனிப்புகளை விற்பனைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளோம்.
இந்தாண்டும் அரசு அதிகாரிகள் ஆவின் நிறுவன இனிப்புகளை வாங்க உத்தரவிடப்பட்டு பொருள்கள் விற்பனை நடந்து வருகிறது.
இவ்வாறு சா.மு.நாசர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தீபாவளி முன்தினம் ஊருக்கு செல்பவர்களின் கவனத்திற்கு!