அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான கலவரங்கள் நாடெங்கும் நடைபெற்றுவரும் நிலையில், இன்று தெலுங்கானா மாநிலத்திலும் கலவரமானது ஆரம்பித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மூன்று நாட்களாக அக்னிபாத் திட்டத்தினை எதிர்த்து பல மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளது. இந்திய ராணுவத்தில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக அக்னிபாத் என்ற திட்டத்தினை மத்திய அரசானது அமல்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின்படி, 17.5 வயதிலிருந்து 21 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இந்திய ராணுவத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வேலைக்குத் தகுதி பெறுபவர்கள் ஆறு மாத பயிற்சி காலத்திற்குப் பிறகு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுமார் 46,000 ராணுவ வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் இந்த அக்னிபாத் திட்டத்தில், நான்கு வருடங்களுக்கு மட்டுமே பணியாற்ற முடியும். வேளையில் சேர்ந்த 25 சதவீதத்தினர் மட்டுமே நிரந்தர பணியாளர்களாக அமர்த்தப்படுவார்கள் என்கிற வரைமுறை புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தில் சேர்வதற்கான வயது வரம்பு குறைப்பும், நான்கு வருடங்கள் மட்டுமே பணியில் இருக்கலாம் என்கிற புதிய நடைமுறையும், ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்கிற கனவில் இருந்த இளைஞர்களுக்கிடையே அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.
இந்த அக்னிபாத் திட்டத்தினை எதிர்த்து கடந்த புதன்கிழமை பீகார் மாநிலத்தில் கலவரங்கள் ஏற்படத்துவங்கியது. மாநிலத்தின் பல பகுதிகளில் நிகழ்ந்த இந்த கலவரங்களில் பங்கேற்ற இளைஞர்கள், ரயில் நிலையங்களை குறிவைத்துத் தாக்கினர்.
தண்டவாளங்களை மறித்தும், அவற்றின் மீது டயர்களை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் ரயில் நிலையங்களில் நின்றிருந்த ரயில்களையும் எரித்துள்ளனர்.
புதன்கிழமை பீகாரில் ஆரம்பித்த இந்த கலவரம், நேற்று உத்தரபிரதேசம், ராஜஸ்தான், அசாம் போன்ற மாநிலங்களிலும் பரவத் தொடங்கியது. இளைஞர்களும், மாணவர்களும் ரயில் நிலையங்களிலும், தேசிய நெடுஞ்சாலைகளில், பேருந்து நிலையங்களிலும் தங்களது எதிர்ப்புகளை கோஷங்களாக மாற்றி முழக்கமிட்டபடியும், பேருந்து வழித்தடங்களை வழிமறித்தும் போராடி வருகின்றனர்.
தெலுங்கானாவில் பரவிய கலவரம்..
பெரிய அளவிலான கலவரங்கள் தெலுங்கானா மாநிலத்திலுள்ள செக்கந்தராபாத் ரயில் நிலையத்தில் நடைபெறத் துவங்கியுள்ளது. ரயில் நிலயத்திற்குச் சொந்தமான உடமைகளை கலவரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் சேதப்படுத்தத் துவங்கியுள்ளனர். ரயில் நிலையத்தில் இருக்கும் சாக்கு மூட்டைகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. தண்டவாளங்கள் மீது இருசக்கர வாகனத்தினைக் கொளுத்தி மறியல் செய்து வருகின்றனர்.
ரயில் நிலையத்தில் இருக்கும் உணவுக் கடைகளும், சிசிடிவி கேமராக்களும் உடைக்கப்பட்டுள்ளன. அந்த பகுதியின் வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தேவையான பாதுகாப்புப்படை வீரர்கள் செக்கந்தராபாத் ரயில் நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
கலவரமானது தெலுங்கானா மட்டுமல்லாது ஹரியானா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களிலும் பரவி வருகிறது. போராட்டம் உச்சமடைந்து வருவதினையடுத்து அதிகபட்ச வயது வரம்பினை 21லிருந்து 23ஆக மத்திய அரசு மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கண்டவனுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!