நாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்தாப் பூனாவாலா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு திரும்பப் பெறப்பட்டது.
முன்னதாக அப்தாப் பூனாவாலா தனது ஜாமீன் மனு தவறாக தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாக கூறி இருந்தார். இதைத்தொடர்ந்து தில்லி நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதியான பிருந்த்தாகுமாரி இந்த வழக்கை கடந்த வாரம் விசாரணை செய்தபோது, அப்தாப் தரப்பில் ஜாமீன் மனு தவறுதலாக தாக்கல் செய்யப்பட்டதாக மின்னஞ்சல் கிடைத்திருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி, குற்றவாளியிடம் காணொளி வாயிலாக பேச வேண்டும் என்று கூறியதால் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காணொளி காட்சி வாயிலாக அப்தாப் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவர், தான் ஒரு வக்காலத் நாமாவை கையெழுத்திட்டதாகவும், அது ஜாமீன் மனு என்று தனுக்கு தெரியாது என்றும் கூறினார். இதற்கு நீதிபதி, ‘ஜாமீன் மனுவை நிலுவையில் வைக்க வேண்டுமா’ என கேட்டதற்கு, தனது வழக்கறிஞரிடம் பேசிய பின், விரைவில் ஜாமீன் மனுவை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்துவதாக அப்தாப் பதில் கூறினார். இதையடுத்து, அப்தாப்பின் ஜாமீன் மனு இன்று திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டது.
இது தொடர்பாக ஷ்ரத்தாவின் தந்தை தரப்பு வழக்கறிஞர் சீமா குஷ்வாஹா, இன்னும் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும், அதற்கு முன்பே அப்தாப் தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும் கூறினார்.
மேலும் ஜாமீன் மனு தாக்கல் செய்ய அனுமதி அளிக்கவில்லையென அப்தாப் தரப்பில் கூறிய நிலையில், இன்று அப்தாப்பின் ஜாமீன் மனு திரும்பப் பெறப்பட்டது என்றும் கூறியுள்ளார்.
குறிப்பு: வக்காலத்து என்பது ஒரு உருது மொழி சொல் ஆகும். இந்த வார்த்தை இந்தி மொழியிலும் பயன்படுத்தப்படுகிறது. இதன் பொருள் வாதாடுதல், பரிந்து பேசுதல் என்பது. வக்காலத் நாமா என்பது தனக்காக ஒரு வழக்கறிஞரை வாதாட எழுதி தரப்படும் சம்மதப் பத்திரம் ஆகும்.
இறுதிப்பட்டியலுக்குள் நுழைந்த ஆர்ஆர்ஆர்; ஆஸ்கரை கைப்பற்றுமா?