வங்கதேச அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், வங்கதேசத்திற்கு எதிரான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட், மிர்பூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன், பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து வங்கதேச அணி பேட்டிங்கில் களமிறங்கியது.
வங்கதேச அணி முதல் நாள் உணவு இடைவேளையின்போது 28 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்தது. ஜாகீர் ஹசனின் விக்கெட்டை உனத்கட்டும் ஷான்டோ விக்கெட்டை அஸ்வினும் எடுத்தார்கள்.
உணவு இடைவேளைக்குப் பிறகு உமேஷ் யாதவ் வீசிய முதல் பந்திலேயே ஷகில் அல் ஹசன் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 5 பவுண்டரிகள் அடித்த முஷ்ஃபிகுர் ரஹிம் 26 ரன்களில் உனத்கட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 25 ரன்கள் சேர்த்த லிட்டன் தாஸை அஸ்வின் வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் பந்துவீச்சு என்பது அதிரவைக்கும் வகையில் இருந்தது. வங்கதேச அணியின் பேட்டர்கள் மெஹிதியை 15 ரன்களிலும் நுருல் ஹசனை 6 ரன்களிலும் ஆட்டமிழக்கச் செய்தார் உமேஷ் யாதவ். அடுத்து வந்த டஸ்கின் அஹமத்தை ஒரு ரன்னில் வெளியேற்றினார். கடைசி இரு விக்கெட்டுகளையும் ஒரே ஓவரில் வீழ்த்தினார் அஸ்வின்.
இருப்பினும், இந்தியப் பந்துவீச்சைத் திறமையாக சமாளித்த மொமினுல் ஹக் 84 ரன்கள் எடுத்த நிலையில் தனது ஆட்டத்தை இழந்தார். மொத்தத்தில், வங்கதேச அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 227 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன்பின்னர், இந்திய அணியினர் பேட்டிங்கில் களமிறங்கினர். முதல் நாள் முடிவில் இந்திய அணி,விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில் 14, ராகுல் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
கேப்டனாக தோனியின் பெயரை சச்சின் பரிந்துரைத்த கதை தெரியும்.. காரணம்?