செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட இன்சைட் விண்கலம் தன்னை பற்றி கவலை பட வேண்டாம் என தன்னுடைய கடைசி தகவலை அனுப்பியுள்ளது.
செவ்வாய் கிரகத்தில் மனிதன் செல்ல முடியுமா? அதற்கான சாத்திய கூறுகள் இருக்கிறதா எனபது குறித்து பல நாடுகள் தங்களின் ஆய்வுக்கான திட்டங்களை வைத்துள்ளன.
அந்த வகையில் செவ்வாய் கிரகத்தில் நிலநடுக்கம் உள்ளிட்ட முக்கிய ஆய்வுகளை மேற்கொள்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா முதன் முறையாக விண்கலம் ஒன்றை அனுப்ப முடிவு செய்தது. இதன்படி, லாக்கேட் மார்ட்டின் என்ற விண்வெளி அமைப்புகளின் நிறுவனம் இன்சைட் தானியங்கி விண்கலம் ஒன்றை தயாரித்தது.
இந்த தானியங்கி விண்கலம் கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 6 மாத கால பயணத்திற்கு பிறகு 2018 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது. இந்நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக இந்த இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகம் குறித்த பல புகைப்படங்களை ஆய்வுக்காக அனுப்பியது.
செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பையும் துளையிட்டு ஆய்வு நடத்தியது. நிலநடுக்கம் அறிய பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட சீஸ்மோமீட்டர் என்ற நிலநடுக்கமானி இந்த விண்கலத்தில் வைத்து அனுப்பப்பட்டது. இந்த நிலநடுக்க மானியினை வைத்து செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட நில அதிர்வுகளை கண்டறிந்து இன்சைட் விண்கலம் அனுப்பியது.
இறுதியாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் செவ்வாய் க்ரகத்தில் ஏற்பட்ட நில அதிர்வுகளை பற்றி கண்டறிந்து இன்சைட் விண்கலம் அனுப்பியது. இந்த அதிர்வு சுமார் 6 மணி நேரம் நீடித்தது. செவ்வாய் கிரகத்தில் எரிகற்கள் மோதிக்கொள்வதால் ஏற்பட்ட 1300 அதிர்வுகளை இன்சைட் விண்கலம் கண்டறிந்து அனுப்பியது.
இந்த இன்சைட் விண்கலத்தின் மூலம் செவ்வாயின் உட்புற பகுதியைப் பற்றி அறிந்துகொள்ள முடிந்தது. இப்படி தனது செயல்களை திறம்படச் செய்து வந்த விண்கலத்திற்கு பிறகு தான் சோதனைகாலம் தொடங்கியது.
ஆம்! செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் மணல் புயல்களால், இன்சைட் விண்கலத்தின் சூரிய தகடுகள் மூடப்பட்டு வந்தன. குறிப்பாக அதற்கு தேவையான மின்சார உற்பத்தியில் சிக்கல் உருவானது. இதன் காரணமாக பேட்டரிகள் விரைவில் செயலிழக்கும் நிலை உருவானது.
இதனை அறிந்த நாசா, 2022 ஆம் ஆண்டு இறுதியில் இன்சைட் விண்கலத்தின் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்த முடிவு எடுத்தது.
அதே சமயம் இன்சைட் விண்கலத்தின் ஆற்றல் குறைந்து கொண்டே வந்தது. மேலும் இந்த விண்கலத்தின் இறுதி நாட்கள் வந்துள்ளன எனபதும் கண்டறியப்பட்டது. இருப்பினும், அதன் ஆற்றல் மாற்றத் தூண்டலுக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.
இந்நிலையில், கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி விண்கலத்திடம் தொடர்பு கொள்ளப்பட்டது. அதன் பேட்டரி மூலம் ரீசார்ஜ் செய்ய முடியாத காரணத்தினால் அதனை பூமியில் இருந்து தொடர்பு கொள்ள முடியாத நிலை உருவானது.
இதனிடையே இன்சைட் விண்கலம் கடைசியாக பூமிக்கு ஒரு புகைப்படத்தை அனுப்பி தனது இறுதி தகவலையும் கூறியது. அதில், என்னுடைய சக்தி குறைவாக இருக்கிறது. இதனால், நான் அனுப்பும் கடைசி புகைப்படம் இதுவாக இருக்கக்கூடும். என்னை பற்றி கவலைப்பட வேண்டாம் செவ்வாய் கிரகத்தில் எனது காலம் பயன் அளிக்கும் விதமாகவும் அமைதியான முறையிலும் இருந்தது. எனது திட்ட குழுவினருடன் என்னால் தொடர்ந்து பேச முடியும் என்றால் நான் பேசுவேன். ஆனால், நான் இத்துடன் விரைவில் விடைபெற இருக்கிறேன். என்னுடன் இருந்ததற்காக நன்றி என விண்கலம் செய்தி அனுப்பி இருப்பதாக நாசா தெரிவித்திருக்கிறது.
விண்வெளியில் 226 கிலோ மீட்டர் அகலமுள்ள மிதக்கும் தங்கம்: வியக்க வைக்கும் ஆச்சர்ய நிகழ்வு