மும்பை தானேவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் 12 கோடி திருடிவிட்டு தலைமறைவாக இருந்த திருடன் சுமார் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு, காவல்துறையிடம் சிக்கியுள்ளார்.
கடந்த ஜூலை 12 ஆம் தேதி தானேவில், இந்த திருட்டு சமவ்வம் நடந்துள்ளது. இந்த தனியார் வங்கியில் அல்டாஃப் என்பவர் பாதுகாவலராக இருந்தார். இவரிடம் தான் எப்போதும் வங்கி சாவிகள் இருக்கும்.
அல்டாஃப் பல காலமாக வங்கியில் பணியாற்றி வந்த நிலையில், திருட்டு எண்ணம் வந்த பிறகு, ஓராண்டு காலமாக வங்கியில் என்னென்ன பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு மிகத் துல்லியமாக செயல்பட்டு, ரூபாய் 12 கோடியை திருடியுள்ளார்.
வங்கியில் இருக்கும் அலாரத்தை அணைத்து விட்டு, சிசிடிவி கேமராக்களை நிறுத்திவிட்டு, வங்கி லாக்கரை திறந்து பணத்தை எடுத்து ஏசித்துளை வழியாக வெளியில் இருக்கும் குப்பை தொட்டியில் வீசி உள்ளார்.
மறுநாள் வங்கி வழக்கம் போல இயங்கியபோது வங்கியின் பாதுகாப்பு பணம் காணாமல் போனது தெரியவந்தது. அப்போது பாதுகாவலர் மாயமானதும் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. பிறகு விசாரணையில் அவரது சகோதரியின் வீட்டில் சிறிது பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் திங்கட்கிழமை அல்டாஃப் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து ஒன்பது கோடி ரூபாய் ரொக்க பணமும் கைப்பற்றப்பட்டது. மேலும், விரைவில் 12 கோடி ரூபாயும் மீட்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, திருடன் தனது முழு தோற்றத்தையே மாற்றிக் கொண்டு, பொது இடங்களுக்கும் செல்லும் போது புர்கா அணிந்து சென்றதும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தானே மற்றும் நவி மும்பை காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதல் பணியில் திருடன் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியா வாக்களித்தே ஆக வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..