ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் விற்பனையை குறைக்க அதிகாரிகளுக்கு ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் வாயிலாக தமிழகம் முழுவதும் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த பாலானது மூன்று தரங்களாக பிரிக்கப்பட்டு ஆரஞ்ச் ,பச்சை ,நீலம் நிற பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்பட்டு வந்தது.
இந்த பாக்கெட் பாலானது ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு ஆரஞ்ச் மற்றும் பச்சை நிற பாக்கெட்டில் 1.00 ரூபாயும் நீல நிற பாக்கெட்டில் 1.50 ரூபாயும் குறைத்து வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் திணறுகிறது. தனியார் பால் விலை மூன்று முறை உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் ஆவினுக்கு பால் வழங்கும் விவசாயிகள் கூடுதல் கொள்முதல் விலையை எதிர்பார்ப்பதாக தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:ஈபிஎஸ் ஆதரவாளருக்கு நெருக்கடி! லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பிய சம்மனை ரத்து செய்ய மறுத்த உயர்நீதிமன்றம்
இந்நிலையில், ஆவின் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வரும் நிலையில், அதை
தவிர்ப்பதற்காக தற்போது சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனை துவங்கப்பட்டு உள்ளது. இது 500 மி.லி. 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த பால் விற்பனை அதிகரிப்பதன் வாயிலாக ஆவின் நஷ்டத்தை சிறிதளவு குறைக்க முடியும்.
இதைத்தொடர்ந்து, ஆவின் நிர்வாகம் ஆரஞ்ச் பால் விற்பனையை குறைத்து சிவப்பு நிற பால் பாக்கெட் விற்பனையை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் விற்பனையில் லாபம் பெரிதாக கிட்டவில்லை என்பதால் இந்த முடிவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு பின் ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் தயாரிப்பு 80 சதவீதம் அளவிற்கு குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, திமுக ஆட்சிக்கு வந்ததும் ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது. அதன்படி 500 மி.லி. ஆரஞ்ச் பால் பாக்கெட் 24 ரூபாய்க்கும் பச்சை நிற பாக்கெட் 22 ரூபாய்க்கும் நீல நிற பாக்கெட் 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இந்நிலையில், ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் விற்பனை குறைக்கப்படுவதால், நுகர்வோர்கள் 30 ரூபாய் மதிப்புள்ள சிவப்பு நிற பால் பாக்கெட்டை வாங்கியாக வேண்டிய சூழல் ஏற்படும்.
இதனால், ஆவின் நிறுவனத்தின் ஆரஞ்ச் பாக்கெட் பால் நுகர்வோர்கள் பெரிதும் ஏமாற்றமடைந்துள்ளனர். திமுகவின் பால் விலை குறைப்பு வாக்குறுதி இதுதானா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.