நாமக்கல் மாவட்டத்தில் திருட சென்ற இடத்தில் செல்போனை சார்ஜ் போட்டுவிட்டு அதை மறைந்து சென்ற நிலையில், திருடனின் செல்போனை வைத்து காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில், சித்திர வேல் என்ற நபர் உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். எப்போதும் போல் இரவு உணவகத்தை மூடிவிட்டு சென்றுள்ளார். அதன் பிறகு, இரவோடு இரவாக மர்ம நபர் ஒருவர், இருட்டில் டார்ச் அடித்துக் கொண்டே திருட ஆரம்பித்துள்ளார்.
முதலில் உள்ளே இருந்த இரு சக்கர வாகனத்தை திருட முயன்றுள்ளார். ஆனால், அதை நகர்த்த முடியாத காரணத்தால், அந்த முடிவைக் கைவிட்டு அப்படியே கல்லா பக்கம் திரும்பியுள்ளார். அந்த சமயத்தில், அந்தத் திருடனின் செல்போனில் சார்ஜ் குறைந்துள்ளது. சரி திருடும் வரையில் சார்ஜ் ஏறட்டும் என்று நினைத்த திருடன் கல்லா பெட்டிக்கு அருகிலேயே சார்ஜ் போட்டு விட்டு, கல்லாப் பெட்டியைத் திறந்து 20,000 ரூபாயை எடுத்துள்ளார்.
இதையும் படிங்க: நிலவில் விவசாயம் செய்ய நினைக்கும் ஆய்வாளர்கள்; இது சாத்தியமா?
பணத்தைப் பார்த்த குஷியில் செல்போனை மறந்து விட்டு சுவரேறி குதித்து சென்ற அந்த புத்திசாலி திருடனை அக்கம்பக்கத்தினர் பார்த்து விட்டனர்.
உடனடியாக சித்திரவேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர் வருவதற்குள் திருடன் தப்பி ஓடியுள்ளார். இதைத்தொடர்ந்து, காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முக்கியமாக திருடனைத் தேடும் காவல்துறைக்கு அல்வாவைத் தூக்கிக் கொடுத்தது போல திருடனின் செல்போனே கிடைத்த நிலையில், விரைவில் அந்த அறிவாளி திருடன் சிக்குவான் என எதிர்பார்க்கப்படுகிறது.