இந்தியன் சூப்பர் லீக் போட்டியில் கேரளா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி 2013-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கால்பந்து ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றதாகவே ஐஎஸ்எல் போட்டிகள் உள்ளது.
இந்த வருடத்திற்கான ஐஎஸ்எல் போட்டிகள் நேற்று தொடங்கியது. கொரோனா சூழல் காரணமாக கடந்த 2 சீசன்களும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே நடத்தப்பட்ட நிலையில், இந்த சீசன் வழக்கமான ‘ஹோம்-அவே’ முறையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு, அதன்படியே நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற இந்த வருடத்திற்கான ஐஎஸ்எல் போட்டியின் முதல் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி – ஈஸ்ட் பெங்கால் எஃப்சி அணிகள் மோதின.
இதையும் படிங்க: உலகின் நான்காவது வலிமையான இந்திய விமானப்படை! நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யத் தகவல்கள்
இந்த போட்டியில் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. இரு அணிகளின் கோல் முயற்சிகளும் வீணாகப் போயின. ஆனால், போட்டியின் இரண்டாவது பாதியில் கேரளா வீரர் அட்ரியன் லூனா முதல் கோலை அடித்தார். இதைத்தொடர்ந்து, கேரளா அணியின் மற்றொரு வீரர் இவான் கல்யுஸ்னி 82-வது நிமிடத்தில் அந்த அணியின் 2-வது கோலை அடித்தார்.
இதற்கு பதில் கோல்கள் பெங்கால் அணித் தரப்பிலிருந்து வருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்க, பெங்கால் அணியின் அலெக்ஸ் 88-வது நிமிடத்தில் கோல் அடிக்க, முதல் போட்டியிலே மிகுந்த பரபரப்பு நிலவியது.
இரு அணிகள் இடையே 1 கோல் மட்டுமே வித்தியாசம் இருந்த நிலையில், 89-வது நிமிடத்தில் இவான் கல்யுஸ்னி மீண்டும் கோல் அடித்து கேரளா அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
போட்டியின் இறுதியில் கேரளா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.