20 வயதே ஆன இளம் காதல் ஜோடிகள், ஆன்லைனில் சூதாட்டம் ஆடி தோற்றதால் நகைப்பறிப்பில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூரை சேர்ந்த 65 வயதான காளியம்மாள் என்ற மூதாட்டி, அங்குள்ள தீயணைப்பு நிலையத்தின் பின்னால், கடந்த 28 ஆம் தேதி ஆடு மேய்த்து கொண்டிருந்துள்ளார். அந்த வழியாக வந்த ஒரு இளம் பெண்ணும் ஆணும் வந்துள்ளனர். வண்டியை அந்தப்பெண் ஓட்டியுள்ளார். காளியம்மாள் எனும் மூதாட்டியிடம் கோவிலுக்கு வழி கேட்பது போல் கேட்டுள்ளார். இதனைப் பயன்படுத்திக் கொண்ட அந்த இளைஞன், மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை அறுத்துள்ளார். உடனே, வேகம் பிடித்த இருவரும் அவ்விடத்தைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
பின் காளியம்மாள், தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து ஆய்வாளர் ஆனந்தகுமார் தலைமையில், தனிப்படை அமைத்து உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ் உள்ளிட்டோர் தலைமையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 20 சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்தனர். இதன் அடிப்படையில், அந்தப்பெண் ஓட்டிச் சென்ற வண்டியின் எண்ணை வைத்து கோவை பைபாஸ் பகுதியைச் சேர்ந்த தேஜஸ்வினி என்ற 20 வயதுடைய கல்லூரி மாணவியை பிடித்துள்ளனர்.
பிறகு அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த போது, தனியார் கல்லூரி ஒன்றில் தகவல் தொழில்நுட்பத் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வருவதாகவும் உடன் படித்துவரும் வடவள்ளி சோமபாளையத்தை சேர்ந்த பிரசாத் என்பவருடன் சேர்ந்து தான் நகைப் பறிப்பில் ஈடுபட்டதாகவும் பிரசாத்தை இவரும் மூன்று ஆண்டுகள் காதலித்து வந்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர், மொபைலில் உள்ள செயலிகளைப் பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், இதன்மூலம் பல லட்ச ரூபாய் இழந்ததாகவும் இதற்காக, சக மாணவர்களிடம் கடன் வாங்கி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும், இதனை திருப்பி தர முடியாததால் புறநகர் பகுதியை தேர்வு செய்து, நகைப்பறிப்பில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பிரசாத்தை பிடித்து விசாரணை நடத்திய போது, பிரசாத் தனது வீட்டில் இருந்த 30 பவுன் நகையை திருடி விற்று செலவழித்ததும், தேஜஸ்வினி தனது வீட்டில் இருந்து 15 பவுன் நகையை திருடி விற்று செலவழித்ததும் தெரியவந்துள்ளது. பின், அவர்களிடம் இருந்த 5 பவுன் நகையை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்தனர். பணம், நகை, ஆடம்பரம் போன்றவற்றுக்கு ஆசைப்பட்டு இளம் காதலர்கள் நகைகளைக் களவாடிய இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க; மாணவர்களின் திறன் மேம்பட பள்ளிக் கல்வித்துறையின் புது நடவடிக்கைகள்!