கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பைபிள் கட்டாயம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கிளாரென்ஸ் என்ற தனியார் கிறித்துவ சிறுபான்மையின பள்ளி ஒன்று உள்ளது. இங்கு, இப்போது 11 வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அப்படியிருக்க, அந்த மாணவர் சேர்க்கை விண்ணப்ப படிவத்தில், ‘உங்கள் மகன் அல்லது மகள் காலை வேளையில் நடத்தப்படும் வேதப்பாட வகுப்பில் கலந்துக் கொள்ள ஒப்புக்கொள்கிறீர்கள்’ எனவும் ‘பைபிள் மற்றும் கிறித்துவ வேதாகம பாடல் கொண்ட புத்தகங்களை எடுத்து வர அனுமதி அளிக்கிறீர்கள்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அங்கு இப்போது மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.
இந்த விவகாரத்தை எதிர்த்து, கர்நாடக இந்து அமைப்புகள் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர். சில அமைப்புகள், இப்படி செய்வது கர்நாடக கல்வி சட்டத்திற்கு எதிரானது என்று தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். பள்ளி நிர்வாகமோ, தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. இதற்கு பதிலளிக்கும் விதமாக கிளாரென்ஸ் பள்ளியானது, இங்கு வேதாமகத்தினை மையப்படுத்தியே பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன என்று கூறியுள்ளது.
இது குறித்து பள்ளியின் முதல்வர் அவர்கள், பள்ளி நிர்வாகத்தின் இந்தச் செயல் சிலருக்கு திருப்தியளிக்கவில்லை என்பதை எங்களால் புரிந்துக் கொள்ள முடிகிறது என்றும், நாங்கள் அமைதியின் வழியிலும் சகோதரத்துவத்தின் வழியிலும் நடந்துக் கொள்ள நினைப்பவர்கள் என்றும், சட்டத்தை மதித்து நடந்துக்கொள்ளவே நாங்கள் விரும்புகிறோம் என்றும் இதுகுறித்து வழக்கறிஞர்களிடம் ஆலோசனை பெறவிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இதனைத்தொடர்ந்து கர்நாடக கல்வி அலுவலர் அப்பள்ளியை பார்வையிட்டுள்ளார். இதுமட்டுமன்றி, இந்த சர்ச்சை குறித்து விசாரணை நடத்தப்படும் என்று கர்நாடக கல்வித்துறை முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஹிஜாப் சர்ச்சை வெடித்து, நீதிமன்ற உத்தரவு வந்து, இன்னும் ஒருமாத காலம் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், மீண்டும் இப்படி ஒரு சர்ச்சை கர்நாடகாவில் கிளம்பியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள், தொடர் சறுக்கலில் தவிக்கும் தமிழ் திரையுலகம்; ‘மீட்பராக’ இருப்பாரா உலகநாயகன்?