விவசாயத்திற்கு முக்கியத் தேவையாக இருப்பது உரங்கள். இன்றைய நவீன உலகில், செயற்கை உரங்கள் அதிகரித்து வரும் நிலையில், இயற்கை உரங்களை பயன்படுத்தும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது இயற்கை உரங்களின் அதிக விலை தான். இதனைக் கருத்தில் கொண்டு, வீணாகும் குப்பையிலிருந்து இயற்கை உரங்களைத் தயாரித்து, மலிவான விலையில் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் விற்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
ஆம்! விவசாயிகள் இயற்கைக்கு திரும்பும் வேளையில், குறைவான விலையில் இயற்கை உரங்கள் கிடைப்பது விவசாயிகளுக்கு வரப்பிரசாதம் ஆகும். இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டு, பலனடைய வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
தினந்தோறும் சென்னை மாநகராட்சியில் 5000 டன் மெட்ரிக் டன் குப்பை சேகரமாகிறது. இந்த குப்பைகள் மட்கும் குப்பை மற்றும் மட்காத குப்பை என இரு வகைகளாக பிரிக்கப்பட்டு, மட்கும் குப்பைகளில் இருந்து முற்றிலும் இயற்கையான முறையில் உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
குப்பையிலிருந்து தயாரிக்கப்பட்ட உரங்களை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் பணியை, சென்னை மாநகராட்சி தொடங்கி உள்ளது. பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்களான பூங்கா மற்றும் கடற்கரை உள்ளிட்ட பல இடங்களில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இன்று, சென்னை மாநகராட்சியில் உள்ள பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் இயற்கை உரங்கள் விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிலோ இயற்கை உரம் ரூ.15 முதல் ரூ.20 விற்பனை செய்யப்படுகிறது. இனி வரும் நாட்களில் உரத் தேவையைப் பொறுத்து, உற்பத்தியை அதிகரிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
இதையும் படிக்கலாமே; இந்த கோடைக்காலத்தில் சன்ஸ்கிரீன் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ளவேண்டியவைகள் இதோ!