தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம்தான், பீஸ்ட். இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்தார். அனிருத் அவர்கள் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படப்படிப்பு ஆரம்பித்ததில் இருந்தே அதிகப்படியான எதிர்ப்பார்ப்பை பெற்றிருந்தது, பீஸ்ட். விஜய் ரசிகர்களிடத்தில் மட்டுமல்லாது, தமிழக ரசிகர்கள் மத்தியிலும் இத்திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு என்பது அதிக அளவில் இருந்தது. திரைப்படத்தில் இருந்து வெளிவந்த அத்தனையும், பீஸ்ட் திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரிக்கும் விதமாகவே இருந்தது.
பெரும் எதிர்ப்பார்ப்பை சம்பாதித்த பீஸ்ட் திரைப்படமானது, இம்மாதம் 13 ஆம் தேதி வெளியானது. திரைப்படம் வெளியான முதல் காட்சியில் இருந்தே, பல எதிர்மறை விமர்சனங்களை பீஸ்ட் பெற்றது. பீஸ்ட் காட்சிகள் திரையரங்குகளில் ஓட ஓட எதிர்மறை விமர்சனங்கள் கலவை விமர்சனங்களாக மாறின.
திரைப்படம் வெளியாகி இரு வாரங்களைக் கடந்த நிலையில் இப்போதும் தமிழகத்தின் பெருவாரியான திரையரங்குகளில் பீஸ்ட் வெற்றிநடைப் போட்டுக்கொண்டிருக்கிறது.
விஜய் எனும் மந்திரம் :
கலவை விமர்சனங்கள் பல வந்தாலும், ‘விஜய் எனும் மந்திரம்’ அவற்றையெல்லாம் புறந்தள்ளவிட்டு மக்களை திரையரங்குகள் நோக்கி இழுத்த வண்ணம் உள்ளது.
பீஸ்ட் திரைப்படத்தின் மீதான ஈர்ப்பு விசை என்பது, வசூலில் பிரதிபலிப்பதை நம்மால் காண முடிகிறது. ஏற்கனவே நூறு கோடி வசூலைக்கடந்த பீஸ்ட் திரைப்படமானது, 12 நாட்களில் 245 கோடியை வசூலித்துள்ளது. சென்னையில் மட்டுமே 9 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது. அதேசமயம், தமிழகத்தை பொறுத்தமட்டில் 120 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது, பீஸ்ட்.
என்னதான் திரைப்படத்தின் வசூல், வன்மத்துடன் கூடிய எதிர்மறை விமர்சனங்களின் வாயை அடைத்தாலும், பீஸ்ட் திரைப்படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மீது மட்டும் வன்மத்துடனான கருத்துகளும், விமர்சனங்களும் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தன.
இந்நிலைமையை மாற்ற பலர் முயற்சித்தாலும் எதுவும் மாறவில்லை. இப்படியான சூழலில்தான் விஜய் அவர்கள் செய்த காரியம் ஒன்று நெல்சன் திலீப்குமார் மீதான வன்ம கருத்துகளை குறைத்துள்ளது.
பீஸ்ட் திரைப்படக் குழுவினரை அழைத்து விஜய் அவர்கள் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளார். விருந்து நிகழ்வும் நிகழ்ந்திருக்கிறது. இந்நிகழ்வைக் குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதனூடே விஜய் அவர்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.
மேலும், நெல்சன் பதிவிட்டுள்ள பதிவில் மறக்கமுடியாத மாலையாகவும், குதூகலத்துடனும் இச்சந்திப்பு இருந்ததாகவும், விஜய் அவர்களுக்கு எங்களை அழைத்ததற்காக நன்றி என்று என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதோடு, விஜய் அவர்கள் தந்த அன்புக்கும் அரவணைப்புக்கும் நன்றி என்று கூறி, விஜய் அவர்களுடன் பணியாற்றுவது மிக எளிமையானது என்றும், விஜய் அவர்களுடன் பணியாற்றியதை என் வாழ்வு முழுவதும் மகிழ்ச்சியுடன் நினைத்துக்கொள்வேன் என்றும், இது பெருமைப்படக்கூடிய ஒன்று என்றும் நெல்சன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் உச்ச நடிகர் பட்டமும், விஜய்யும் மட்டுமே இந்த திரைப்படம் இவ்வளவு தொலைவு வந்ததுக்கு காரணம் என்றும் நெல்சன் தெரிவித்துள்ளார். நெல்சன் படக்குழுவினருக்கும், ரசிகர்களுக்கும் அப்பதிவில் நன்றி கூறியுள்ளார்.
விஜய் அவர்களுடான இந்த சந்திப்பு நெல்சன் திலீப்குமார் மீதான விமர்சனங்களை குறைத்துவிடும் என்பதில் ஐயம் இல்லை.
வாங்க நம்ம படிக்கலாம்; தொடர் சறுக்கலில் தவிக்கும் தமிழ் திரையுலகம்; ‘மீட்பராக’ இருப்பாரா உலகநாயகன்?