இந்தியாவின் அண்டை நாடான இலங்கை நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை பலமடங்கு அதிகரித்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோலின் விலை உச்சத்தை தொட்டு அந்நாட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது. அவற்றை வாங்குவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் தெருக்களில் காத்து கிடக்கின்றனர்.
பெட்ரோல் பற்றாக்குறை நிலவுவதால், நிலக்கரி சுரங்கங்கள் மூடப்பட்டு மின்சார தயாரிப்பும் தடைபட்டுள்ளது. அங்கு ஒரு நாளைக்கு 16 மணிநேரம் மின்சாரத்தடை நிகழ்ந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற தொடர் போராட்டங்களின் விளைவாக பிரதம அமைச்சர் மஹிந்த ராஜபக்சே தவிர அனைத்து அமைச்சர்களும் பதவி விலகினர்.
புதிய அமைச்சர்கள் பதவி ஏற்று நாட்டின் நிலைமையை சீராக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும், மக்கள் நடத்தும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகின்றது. விலைவாசி ஏற்றத்தை தாங்க முடியாமல் மக்கள் இந்தியா போன்ற அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் புகுந்து வருகின்றனர்.
தற்பொழுது இருக்கும் விலைவாசியையே மக்கள் தாங்க முடியாத நிலையில் உள்ளபொழுது, மீண்டும் கேஸ் சிலிண்டர் விலையை ஏற்ற போவதாக அந்த நாட்டின் லிட்ரோ நிறுவனம் அறிவித்து இருந்தது. அதாவது அங்கு தற்பொழுது 12.5 கிலோகிராம் எடையுள்ள சிலிண்டரின் விலை 2500 ரூபாயாக உள்ளது. அது 5,175 ரூபாயாக உயர்த்தப்போவதாக அறிவித்து இருந்தது. இது ஏப்ரல் 22ம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என அறிவித்து இருந்தது.
இது மேலும் அரசாங்கத்துக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதால், இந்த விலை ஏற்றத்துக்கு அனுமதி கொடுக்க மறுத்து வந்தது, புதிதாய் பதவி ஏற்ற அரசாங்கம். இதனால் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை ரத்து செய்துள்ளது லிட்ரோ நிறுவனம். அமைச்சரவையில் பேசி விலை ஏற்றத்திற்கு ஒப்புதல் பெற்ற பின்னே விலை ஏற்றப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் படியுங்கள், இதற்காகத்தான் இரஷ்யாவுடன் உறவு; இந்திய நிதியமைச்சர் அமெரிக்காவில் பேச்சு!