அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆதரவாக கூடிய மக்கள் கூட்டத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் இம்ரான் கான்.
பாகிஸ்தானின் சுதந்திரத்திற்குப் பிறகு எந்த பிரதமரும் அங்கு 5 ஆண்டுகள் முழுமையாக பிரதமராக இருந்ததில்லை. இந்த மோசமான சூழ்நிலை இன்று வரை தொடர்ந்து வந்த நிலையில், அந்த மோசமான சாதனையை இம்ரான் கான் முறியடிப்பார் என்று கருதப்பட்டது. இந்நிலையில் அவரும் பதவியை விட்டு நீக்கப்பட்டார்.
புதிய பாகிஸ்தானை உருவாக்குவோம் என்ற தேர்தல் பரப்புரை மூலம் 2019ல் பிரதமர் ஆனார் இம்ரான் கான். இவர் தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு சில காலங்களாகவே நிலைமை பதற்ற நிலையிலேயே காணப்பட்டது. எதிர்க்கட்சிகள் இம்ரான் கான் அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த ஆரம்பித்தன. அங்கு, நாடாளுமன்றம் நோக்கி இம்ரான் கானை எதிர்த்து நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், இம்ரான் கானின் கூட்டணி கட்சிகளும் அவருக்கு எதிராக திரும்பியதால் நிலைமை மேலும் இக்கட்டான சூழ்நிலைக்கு உள்ளானது. அங்கு உடனடியாக அமைச்சரவையும் கலைக்கப்பட்டது. இதனால், இம்ரான் கானும் பதவியை இழந்து விட்டார் என்ற சர்ச்சை எழத் தொடங்கியது. இவ்வளவு குழப்பங்களுக்கு இடையே கடந்த சனிக்கிழமை நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இம்ரான் கான் பதவி பறிக்கப்பட்டது.
342 வாக்குகளில் 174 வாக்குகள் அவருக்கு எதிராக விழுந்ததால் அவர் பதவியை இழந்தார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் மூலம் பதவியை இழக்கும் முதல் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஆவார்.
தனக்கு எதிராக அமெரிக்கா சதித்திட்டம் தீட்டி இவ்வாறு செய்வதாகவும், இதனால் பாகிஸ்தான் மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும் என்று தொடர்ந்து இம்ரான் கான் கூறி வந்தார். இந்நிலையில், இம்ரான் கானின் ஆதரவாளர்கள் தெருக்களில் இறங்கி போராடத் தொடங்கியுள்ளனர். பாகிஸ்தான் வரலாற்றில் இவ்வளவு மக்கள் ஒன்றுகூடி போராடுவது இதுவே முதல் முறை ஆகும்.
இது தொடர்பான காணொளியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு அந்த மக்களுக்கு தன்னுடைய நன்றியைத் தெரிவித்துள்ளார் இம்ரான் கான். மேலும், பாகிஸ்தானில் சுதந்திர போராட்டம் வெடித்துள்ளதாகவும் கூறியுள்ளார் இம்ரான் கான். இன்று பாகிஸ்தானின் புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப் படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த போராட்டம் மேலும் பாகிஸ்தானில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.