கேரளாவில் பாராகிளைடிங் செய்த சுற்றுலாப்பயணிகள் இரண்டு பேர் மின்கம்பத்தில் சிக்கிக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம், திருவனந்தபுரம் வர்கலாவில் இருக்கும் பாபநாசம் கடற்கரையில் சுற்றுலாப் பயணிகள் இருவர் பாராகிளைடிங் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி அவர்கள் சாகசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர்களுடைய பாராசூட் மின்கம்பத்தில் சிக்கியது. இதன் காரணமாக, அவர்கள் நினைத்த இடத்தில் இறங்க முடியாத சூழல் உருவானது. அதோடு அவர்கள் மின்கம்பத்தில் தொங்கியபடி சிக்கி தவித்தனர்.
மின்கம்பம் 50 அடி உயரம் கொண்டதாக இருந்த நிலையில் அதிலிருந்து விழாமல் இருக்க அவர்கள் முயன்றுக்கொண்டு இருந்தனர். சுமார் 2 மணி நேரமாக தொங்கிய நிலையில் அவர்கள் தவித்து வந்தனர். இத்தகவல் அறிந்து சென்ற காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் அவர்கள் இருவரையும் பாதுகாப்பாக மீட்டனர்.
பாராகிளைடிங் மூலம் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நாட்டின் வெவ்வேறு இடங்களில் பாராகிளைடிங் செய்த இருவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக, பாஜக இடையே மோதல் இல்லை- ஜெயக்குமார் பேச்சு..