தென்காசியில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்லூரி பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சுரண்டை என்கிற பகுதியில் காமராஜர் அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கி வருகிறது. பல்வேறு பிரிவுகளில் பல்வேறு மாணவர்கள் இக்கல்லூரியில் பயின்று வருகின்றனர்.
இக்கல்லூரியில், வணிகவியல் துறை மாணவி ஒருவர் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த மாணவிக்கு அக்கல்லூரியின் வணிகவியல் பேராசிரியர் அஜித் என்பவர் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அதையடுத்து அந்த மாணவி, இதுகுறித்து கல்லூரி முதல்வர் உட்பட முதலமைச்சர் வரை மனுக்கள் அனுப்பியுள்ளார்.
இருப்பினும், அந்த பேராசிரியர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் பேராசிரியரைக் கைது செய்ய வலியுறுத்தி இன்று கல்லூரியைப் புறக்கணித்து கல்லூரி வாயிலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களிடம் போலீஸார் மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ரஜினியின் அடுத்தப் படம் இவருடன்தான்; வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு…