நடிகர் ரஜினிகாந்த் நடிக்க உள்ள அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் முடிவடைந்தவுடன் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘லால் சலாம்’ படத்தில் கவுரவத் தோற்றத்தில் நடிக்க உள்ளார்.
இந்நிலையில், ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 170-ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு தற்போது தற்காலிகமாக ‘தலைவர்170’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அதோடு இப்படத்தை ‘ஜெய்பீம்’ படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து லைகா நிறுவனம் தெரிவித்துள்ளாதவது:
லைகா குழுமத் தலைவர் திரு. சுபாஸ்கரன் பிறந்தநாளில் “சூப்பர் ஸ்டார்” திரு. ரஜினிகாந்த் அவர்களின் “#தலைவர் 170” திரைப்படத்தின் அறிவிப்பை அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் மற்றுமொரு பெருமைமிகு தருணம் இது. தலைமுறைகள் கடந்து திரை ரசிகர்களை மகிழ்வித்து மகிழ்கின்ற “சூப்பர் ஸ்டார்” திரு.ரஜினிகாந்த் அவர்களின் “#தலைவர் 170” திரைப்படத்தின் பணிகள் இனிதே ஆரம்பம்.
இயக்குநர் திரு. த.செ.ஞானவேல் இயக்கத்தில், இசைவழி நம் இதயங்களை இணைக்கும் திரு. அனிருத் இசையில், பிரம்மாண்டமான திரைப்படங்களைப் படைத்தளிக்கும் திரு. சுபாஸ்கரன் தயாரிப்பில், லைகா புரொடக்ஷன்ஸ் தலைமைப் பொறுப்பாளர் திரு. ஜி.கே.எம். தமிழ் குமரன் அவர்களின் தலைமையில், “#தலைவர் 170” திரைப்படம் 2024-ம் ஆண்டு திரைக்கு வரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
சூப்பர் ஸ்டார் அவர்களின் ஒவ்வொரு திரைப்பட வெளியீடும், ரசிகர்கள் கொண்டாடும் திருவிழாதான். அவருடன் மீண்டும் இணைவதில் லைகா புரொடக்ஷன்ஸ் பெருமிதம் கொள்கிறது. அனைவரின் வாழ்த்துகளோடு 2024-ல் மாபெரும் கொண்டாட்டத்திற்குத் தயாராவோம். நன்றி!!!
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை படைத்த ரவீந்திர ஜடேஜா..