சரத்குமார் நடித்த ‘சூரியன்’ படத்தில் பூமிதி திருவிழா, பூமிதி திருவிழா என்று கூறிவிட்டு கவுண்டமனியை தீ மிதிக்க வேண்டும் என்பர். ‘என்னது தீ மிதிக்கனுமா’ என கவுண்டமனி ஷாக் ஆவதும், அதன் பின் அந்தக் காட்சியில் நிகழ்வதும் இன்றும் ரசிக்க கூடிய நகைச்சுவை காட்சிகளில் ஒன்றாக உள்ளது.
தீ மிதிப்பதை பூ மிதி என்று சொல்கிறார்களே அந்த அளவிற்கு தீ மிதிப்பது என்பது இயல்பானதா? தீ மிதித்தால் பாதம் கொப்பளித்து வலிதானே ஏற்படும். அதைப்போய் பூ மிதி என்கிறார்களே? என்ற கேள்வி இன்றளவும் பலரிடத்தில் இருக்க கூடிய ஒரு கேள்வி.
இந்தக் கேள்விக்கான பதிலை சற்றே அறிவியல் மூலம் அறிவோம். இயல்பாக பலர் தீமிதித்தலில் ஈடுபடுவதை நாம் பார்த்திருப்போம். சிலருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டாலும், பெரும்பாலானோருக்கு தீக்காயங்கள் ஏதும் ஏற்படுவதில்லை.
தீக்காயம் ஏற்படாமல் இருப்பதற்கான காரணமாக, பாதத்தில் சுரக்கும் வியர்வைகளை ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஒரு திரவத்தைத் திடீரென்று எக்கச்சக்கமான வெப்பத்துக்கு உள்ளாக்கினால் அது தனக்கு மேலே ஒரு நீராவிப் படலத்தை உண்டாக்கிக் கொள்ளும். இந்த விதியின்படி, தீமிதிக்கும் போது பாதங்களில் ஏற்படும் வியர்வை நீராவியாக மாறுகிறது. இந்த நீராவி சிறிது நேரத்திற்கு பாதங்களை நெருப்பிலிருந்து பாதுகாக்கிறது.
இந்த காரணம் மட்டுமல்லாமல் மற்றொரு காரணமும் கூறப்படுகிறது. அதன்படி பாரத்தால், பெரும்பாலும் தீமிதியில் கொட்டி வைக்கப்படும் கரித்துண்டுகள் மிகவும் லேசானவை. அவை உள்ளே வெற்றிடம் கொண்டதாகவும் இருக்கும். இவற்றின் வெப்பநிலை மிக அதிகமாக இருந்தாலும் அவை கடத்தும் வெப்பத்தின் அளவு குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
எல்லாம் சரி.. திமீதியின் போது பெரும்பாலானோருக்கு தீக்காயங்கள் ஏதும் ஏற்படுவதில்லை என்றாலும், சிலருக்கு தீக்காயங்கள் ஏற்படுகிறதே என்றால் அது அவருடைய உடல்நிலை மற்றும் மனநிலையைப் பொறுத்தது என்ற பதிலையும் ஆராய்ச்சியாளர்கள் முன்வைக்கின்றனர். என்னதான் ஆராய்ச்சிகள் பதில்களை கூறினாலும். அப்பதில்கள் போதுமானதாக இல்லை என்பதே நிதர்சனம்.
நாய்கள் வளர்ப்பவர்களா நீங்கள்? – அப்போ ஜாக்கிரதையா இருங்கள்… பரவும் வைரஸ்!