திருச்சி என்றாலே முதலில் நினைவுக்கு வருவது மலைக்கோட்டை தான். இருப்பினும் திருச்சியில் சிறப்பு வாய்ந்த பார்க்கக்கூடிய ஆன்மிக தலங்கள் கொள்ளிடமும் திருவரங்கமும்.
காவிரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடைப்பட்ட 600 ஏக்கர் நிலப்பரப்பில் திருவரங்கம் என்ற இந்தத் தீவு நகரம் அமைந்து இருக்கிறது. திருச்சியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த திருவரங்கம். இங்கு பல பிரம்மாண்டங்களுடன் கட்டப்பட்டுள்ள திருவரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது ஆகும். பார்த்தே ஆக வேண்டும் என்ற ஆன்மிக தலங்களில் மிக முக்கியமான தலம் தான் திருவரங்கம். இந்தத் திருக்கோயிலின் சிறப்புகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
திருவரங்கம் தலவரலாறு:
திருவரங்கம் கோயில் விமானம் பிரம்மனின் தவத்தால் திருப்பாற்கடலில் இருந்து தோன்றியதாகும். இதனை சுயம்பு என்றும் கூறுவது வழக்கம். பிரம்மா நித்திய பூசை செய்ய சூரியனை நியமனம் செய்தார். அதன் பின்பு சூரிய குளத்தில் பிறந்த இட்சுவாகு இதனை தலைநகரமான அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். பிறகு ராமர் இந்த விமானத்தை இலங்கையிலிருந்து அவரின் பட்டாபிஷேகத்திற்கு வந்த விபீஷணனுக்கு பரிசாக அளித்தார்.
அப்போது விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து சென்றார். எங்கேயேயும் கீழே வைக்க கூடாது என்று ராமர் அறிவுரை கூறிய நிலையில், அவர் காவிரி ஆற்றின் கரையோரம் சென்றுகொண்டிருந்தபோது, இளைப்பாற நினைத்தார்.
அப்போது அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவனிடம் அந்த விமானத்தை கையில் வைத்திருக்க சொல்லி, எக்காரணம் கொண்டும் கீழே இறக்க கூடாது என்றும் கூறி கொடுத்துவிட்டு சற்று இளைப்பாறினார்.
சற்று நேரம் இளைப்பாறிய விபீஷணன் கண்விழித்து சிறுவனிடம் இருந்த விமானத்தை வாங்க செல்கையில், சிறுவனின் கையில் இருந்த விமானம் கீழே இறக்கி வைக்கப்பட்டிருந்தது. உடனே என்ன காரியம் செய்துவிட்டாய் என கூறி, விமானத்தை எடுக்க முயன்றார் விபீஷணன். அவர் எவ்வளவு முயன்றும் அந்த விமானத்தை அவரால் சிறிது கூட நகர்த்த முடியவில்லை. அப்போது சிறுவனாக வந்த விநாயக பெருமான், “நான் தான்” எனக் கூறி மறைந்தார்.
அந்த விநாயகருக்கு காவிரி கரையோரத்தில் மலை உச்சியில் கோயில் உள்ளது. அவரே மலைக்கோட்டை திருச்சி உச்சி பிள்ளையார். இது திருவரங்கம் கோயிலுக்கு எதிரே அமைந்துள்ளது.
இதன்பின்பு, வைகுண்ட பெருமாள் அரங்கநாதராக காட்சியளித்தார். மேலும் காவிரிக்கரையிலேயே தங்கி இருக்க விருப்பம் கொண்டார். பிறகு அங்கு சோழ நாட்டை ஆண்டு வந்த தர்மவர்ம சோழன் விபீஷணனுக்கு ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். மேலும் விபீஷசனுக்காக தென்திசை நோக்கி பள்ளிகொள்வதாக அரங்கநாதர் வாக்கு கொடுத்தார்.
இதன் பின்பே தர்மவர்ம சோழன் அச்சிலையைக் சுற்றி கோயில் எழுப்பினார். தொடர்ந்து பூஜித்து வழிபாடு செய்து வந்தார். சில காலம் கழித்து காவிரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கோயில் முழுவதும் மணலால் மூடப்பட்டது. இதன் பின்பு, சோழ குலத்தில் வந்த ஒரு மன்னர் ஒரு கிளியின் உதவியுடன் இந்தக் கோயிலை கண்டுபிடித்ததால், கிளி சோழன் “கிள்ளிவளவன்” என்று அழைக்கப்பட்டார். பிறகு இவரே, கோயிலை முறையாக புனரமைத்தார். மேலும் பிரமாண்டமான பெரிய கோயிலாக மாற்றினார் கிள்ளிவளவன். இதுவே நாம் தற்போது காணும் அரங்கநாதர் கோயிலாக காணப்படுகிறது.
சிரீ தொண்டரடிப் பொடி ஆழ்வார் முதலாயிரம் திருமாலை 19 வது பாட்டு.
குடதிசைமுடியைவைத்துக் குணதிசைபாதம் நீட்டி
வட திசைபின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுளெந்தை அரவணைத்துயிலிமாகண்டு
உடலொனக்குருகுமாலோ என்செய்கேனுலகத்தீரே.
இந்தக் கோயில் குறித்து சங்க இலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளது.
திருவரங்கம் கோயிலின் அமைப்பு:
கோயில் மட்டும் 156 ஏக்கரில் அமைக்கப்பெற்றுள்ளது. அதாவது 6,31,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உடையது ஆகும். இது நாட்டிலேயே மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாகும். இந்த அரங்கநாதர் கோயிலை சுற்றி ஏழு பெரிய மதில்கள் காணப்படுகின்றன. மையப் பகுதியில் அரங்கநாதர் எழுந்தருளுகிறார்.
கோயிலில் இருந்து நான்கு புறமும் வெளியே செல்லும் வகையில் நான்கு கோபுர வாயில்கள் அமைந்துள்ளன. மேலும் கோயிலை சுற்றி உட்புறமாக அமைக்கபெற்றிருக்கும் 4 சுற்றுகளும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உடையவை. வெளிப்புறமாக இருக்கும் 3 சுற்றுகளில் வணிக நிறுவங்களும் தெருக்களும் வீடுகளும் காணப்படுகின்றன.
தெற்கு ராசகோபுரம்:
அரங்கநாதர் கோயிலின் தெற்கே 400 ஆண்டுகளுக்கு முன்பு நாயக்க மன்னர்களால் ஆரம்பிக்கப்பட்டு முற்றுப்பெறாத நிலையில் இருந்தது. இதனை அகோபில மடத்தின் 44-வது சீயர் அழகிய சிங்கர் முயற்சியின் காரணமாக கட்டுமான பணிகள் 1979 ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து 8 ஆண்டுகள் நடைபெற்றது. பின்பு 13 கலசங்களுடன் 236 அடி உயரத்தில் 1987 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது.
கோயில் விழாக்கள்:
மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி இங்கு பெரும் சிறப்பு வாய்ந்தது. இந்தத் திருவிழா 21 நாட்கள் நடைபெறுகிறது. இத்தலத்தில் மூன்று பிரமோற்சவங்கள் நடைபெறுகின்றன.
ஆசிய கண்டத்தில் பசிபிக் மண்டலத்தில் உள்ள 10 நாடுகளில் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மாறாமல், இக்கோயிலை பாதுகாத்தற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு யூனஸ்கோ அமைப்பு விருது வழங்கி பெருமை சேர்த்தது.