பழைய குற்றாலம் அருவியின் தடாகத்தில் தவறி விழுந்த குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், குற்றாலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சமீப காலமாகவே தொடர் மழை பெய்து வருகிறது. அதே சமயம் தற்போது பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால், குற்றால அருவிகளுக்கு அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், பழைய குற்றாலம் அருவியில் நேற்று நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு பாலக்காட்டைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் அருவியில் குளித்து கொண்டிருந்தார். 4 வயதான இவரின் குழந்தை ஹரிணி, அருவியின் முன்புறம் தண்ணீர் விழும் பகுதியில் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது திடீரென, ஹரிணி அருவியின் தண்ணீர் வெளியேறும் இடத்தில் உள்ள துவாரத்தின் வழியாக தவறி கீழே விழுந்தார். குழந்தை அடித்து செல்லப்படுவதை பார்த்த அப்பகுதியில் இருந்த இளைஞர் ஒருவர், குழந்தை அடித்து செல்லப்பட்ட பகுதிக்கு துணிச்சலுடன் சென்றார். பிறகு குழந்தை ஹரிணியை அந்த இளைஞர் பத்திரமாக காப்பாற்றினார்.
பின்பு குழந்தை அவரின் தாய் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார். குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் காரணமாக குற்றால அருவியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
‘சீனி பார்வை வீசும் பூரணமே’ – த்ரிஷாவின் க்யூட் புகைப்படங்கள்!