கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மூன்று பத்திரிக்கையாளர்கள் குடும்பத்திற்கு தலா 50,000 ரூபாயை முதல்வர், அமைச்சர்கள் வழங்கினார்கள்.
புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மூத்த போட்டோகிராபர் பட்டாபிராமன் இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் பணிபுரிந்த அனுபவம் உள்ளவர். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக புதுச்சேரி மக்கள் அவதிப்பட்டு வந்த கொரோனா தொற்று காலத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் தனது புகைப்பட பணியை செய்து வந்தார். அந்த சமயத்தில் கொரோனா தொற்று காரணமாக தன்னுடன் பணியாற்றிக் கொண்டிருந்த 3 சக பத்திரிகை நண்பர்கள் இறந்த சம்பவம் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி செய்ய நினைத்த அவர் தனது கேமரா மூலம் எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்களை கண்காட்சியாக வைத்து அதன் மூலம் விற்பனையான தொகையை இறந்த 3 பத்திரிக்கையாளர்களின் குடும்பத்திற்கும் தலா 50,000 எனவும், மாரடைப்பில் இறந்த தமிழ்சுடர் செய்தியாளர் முத்துகுமார் குடும்பத்திற்கு 50,000 ரூபாய் என இரண்டு லட்ச ரூபாய் வழங்க முடிவு செய்தார்.
அதன்படி சட்டமன்றத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உயிரிழந்த் பாலிமர் டிவி கேமராமேன் பரத் குடும்பத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி ஐம்பதாயிரம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அப்போது சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர் தேனி ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து கொரோனாவில் இறந்த மாலை தமிழகம் நிருபர் ரமேஷ், தினமலர் போட்டோகிராபர் வெங்கட் ஆகியோர் குடும்பத்திற்கு தலா 50,000 ரூபாய்க்கான
நிவாரண உதவியை பொதுப்பணித்துறை அமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமி நாராயணன் வழங்கினார்.
கொரோனா காலத்தில் தன்னுடன் பணியாற்றிய மூன்று பத்திரிக்கையாளர்கள் குடும்பத்திற்கு தனது புகைப்பட கண்காட்சி மூலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு புகைப்பட நிருபர் பட்டாபிராமன் செய்த உதவி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.