பரவலாக பெய்து வரும் மழை காரணமாக சென்னையின் நீராதாரங்களில் ஒன்றான போரூர் ஏரி 75 சதவீதம் நிரம்பியுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையின் நீராதாரங்களில் ஒன்றான போரூர் ஏரி 75 சதவீதம் நிரம்பியுள்ளது.
சென்னை மக்களுக்கு தினந்தோறும் 40 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கி வரும் போரூர் ஏரி, தொடர் மழை காரணமாக 75 சதவீதம் தற்போது நிரம்பியுள்ளது.
இந்தப் போரூர் ஏரி கடந்த 2015 ஆம் ஆண்டு தூர் வாரப்பட்டது. 46 மில்லியன் கன அடியிலிருந்து 70 மில்லியன் கன அடி நீரை சேமிக்கும் வகையில் ஆழப்படுத்தப்பது.
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரானது மதனந்தபுரம், முகலிவாக்கம், ராமாபுரம், மணப்பாக்கம் வழியாக சென்று அடையாறு ஆற்றில் கலக்கும்.
இதையும் படிங்க: தமிழகம் முழுவதும் கொட்டி தீர்த்த மழை ! இன்று 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
தற்போது உபரி நீர் செல்லும் கால்வாய் குடியிருப்புகளாக மாறி விட்டதாலும், ஏரியின் குறுக்கே தாம்பரம் – மதுரவாயல் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதாலும் உபரி நீர் செல்வதற்கு வழி இன்றி பரணிபுத்தூர், பட்டூர், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட கிராமங்களில் மழைநீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு பெய்த மழையின்போது இந்த பகுதிகள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்து பெரும் பாதிப்புக்கு உள்ளானது.
அதேபோல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கால்வாய்கள் துார் வாரப்பட்டு தயார் நிலையில் உள்ளதால், 23 அடி வரை நீர் தேக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் மிக முக்கியமான செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினால் உபரி நீர் திறப்பது வழக்கம். இந்தாண்டு கிருஷ்ணா நதி நீர் வரத்தால், கோடையிலும் ஏரி நிரம்பியது.
இந்நிலையில், நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி, ஏரியின் நீர்மட்டம் 21.04 அடியாகவும், ஏரியின் கொள்ளளவு 2.8 டி.எம்.சி.,யாகவும் இருந்தது. ஏரிக்கான நீர்வரத்து 539 கன அடியாகவும் உள்ளது.